Total Views: 21868
காதலொன்று கண்டேன்!
தேடல் 04
அவனுக்காக
"ஐ பௌன்ட் ஹர்..இனிமே அவ கூட என்னோட வாழ்க்க..உருகி உருகி என்ன லவ் பண்ண பொண்ணுக்காக நா இது கூட பண்ணலனா எப்டி..? ரொம்ப தேங்க்ஸ்..நீ தான் அவள நா கண்டுபிடிக்க ரீசன்.." முகம் கொள்ளாப் புன்னகையுடன் தன்னிடம் சொன்னவனை வெறித்துப் பார்க்க மட்டுமே முடிந்தது,அவளால்.
கண்களில் நீர் திரையிட்டு இருக்க அதை பிரயத்தனப்பட்டு மறைத்து இதழ் பிரித்தவளின் புன்னகையில் மொத்தமாய் வலிகள் மட்டுமே.
அவனுக்காக அவள் சுமந்து நின்ற காதல் முழுக்க தோற்றுப் போன வலி.அவன் காதல் வேண்டி தவித்துக் கொண்டிருந்த அவள் ஜீவன் மொத்தத்தையும் உருவி எடுத்த வலி.
சொல்லாக் காதலில் வலிகள் இருப்பது ஒன்றும் புதிதல்லவே.
ஒருவேளை பொய் சொல்கிறானோ என்கின்ற எண்ணத்தில் விழி நிமிர்த்தி அவன் விழிகளை ஆராய அதில் படிந்து கிடந்த உணர்வுகளை எப்போதும் போல் இம்முறையும் படிக்க முடியவில்லை.விரக்தியாய் இருந்தது,தன்னை எண்ணி.
புரிந்து கொண்ட அவள் உணர்வுகளும் புரிந்து கொள்ள முடியா அவன் உணர்வுகளும் ஒருமிக்க கலந்து அவளின் மனதை அசைத்து அழ வைக்கிறதே.
"என்ன நா பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்..நீ எதுவும் சொல்லாம இருக்க..?"
இதழ் தேங்கிய புன்னகையுடன் அவன் கேட்ட கேள்விக்கு வெற்றுப் புன்னகையை உதிர்த்தவளின் விழிகளில் தெரிந்த வலி அவனையும் வெகுவாய் ஆட்டி வைத்தது.
"ஆர் யூ ஓகேஏஏஏஏ..?" பதட்டம் மிகுந்த அவனின் குரலிலேயே தான் செய்து கொண்டிருக்கும் காரியம் உரைக்க விழி மூடி தன்னை சமப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள்,அவள்.
"ஆமா..எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்ல..சரி அப்போ மேரேஜ்கு இன்விடேஷன் கொடுங்க.." தன் வலியை மறைத்துக் கொண்டு பேசியவளை அள்ளிக் கொஞ்சத் தோன்றியது,அவனுக்கு.
தலை தாழ்த்தி அமர்ந்து மெனு கார்டில் பார்வையை மேய விட்ட படி சொன்னவளை பார்த்துக் கொண்டிருந்த அவனின் இரு விழிகளிலும் காதல் கரைந்தோடிற்று.
இமைக்காத பார்வை அவளில் இருக்க உள்ளுணர்வின் உபயத்தில் விழி நிமிர்த்தியவளின் பார்வைக்குள் சிக்காது தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டான்,சாதுரியமாய்.
அவன் விழிகளில் எதையோ தேடி தோற்று தாழ்ந்து போன அவள் விழிகளின் ஏக்கம் அவனுக்கு புரியாமல் போகுமா என்ன..?
அவளை தோள் சேர்த்து ஆறுதல் சொல்ல முற்பட்ட கரங்களை சிரமத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டவனின் மனதிலும் பலவித எண்ண அலைகள்.
அவனும் அவளின் காதலில் மொத்தமாய் தொலைந்து கரைந்து தான் போகிறான்,ஒவ்வொரு முறையும்.சலிப்பில்லாமல் அது அத்தனை பிடித்தும் இருந்தது.
இந்த நிலையிலும் தன் காதலை சொல்லா அவள் மீது துளியாய் கோபம் வந்தாலும் தன் வலி மறைத்து அவனைப் பற்றி மட்டும் யோசிக்கும் அந்தக் காதல் பிரமிப்பாகவும் இருந்தது.
அவளைக் காயப்படுத்த விரும்பவில்லை என்றாலும் அவனின் சட்டைக் காலரை பற்றி கோபத்துடன் அவள் காதலை உரைக்க வேண்டும் என்பது அவனின் ஆழ்மன ஏக்கம்.அது தான் இத்தனையையும் அவனை செய்ய வைக்கிறது,தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு.
"சரி..நாளன்னிக்கி நா சொல்ற எடத்துக்கு வந்துரு..நா என் பியான்சியோட உன்ன மீட் பண்றேன்.." அவன் சிரிப்பை அடக்கிய படி சொல்ல அவளுக்கு கண்ணீர் வழிந்தே விட்டது.
விடுவிடுவென எழுந்து அவன் முகம் பாராமல் நடந்து செல்ல அவளின் முதுகை துளைத்துக் கொண்டிருந்தது,காதல் கொண்டவனின் பார்வை இரசனையுடன்.
தன் விடுதி அறைக்கு வந்து உள்ளுக்குள் அடைந்தவளுக்கு மனம் மட்டும் ஆறவில்லை.முழங்காலில் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழுதவளுக்கு கண்ணீரும் நின்றபாடில்லை.
அவளின் காதல் தோற்றுப் போய் விட்டதாய் நினைத்தவளுக்கு மனதை உடைத்து நொருக்கும் வலி.அவள் அறையில் யாரும் இல்லாவிடினும் எதிரறையில் இருப்பவர்களுக்கு சத்தம் கேட்கக் கூடாது என வாயைப் பொத்திக் கொண்டு அழுதவளுக்கு தன் வலியைக் கூட மொத்தமாய் கத்தி தீர்த்திடும் சூழ்நிலை இல்லை.
திரளாய் நீர் கட்டி கன்னத்தின் ஊடு வழிந்து வலியை குறைக்க முயல துடைக்கவும் விரல்கள் எழவில்லை.இந்தக் காதல் எத்தனை தடவை தான் அழ வைக்கும்..?
நினைக்கையிலே மீண்டும் அழுகை வெடித்திட எச்சில் விழுங்கிக் கொண்டவளுக்கு அது அவனின் நடிப்பென்று புரியவே இல்லை.ஏன் துளியாய் சந்தேகம் கூட வரவில்லை.
அவளுடன் அவன் நடந்து கொண்ட முறை அப்படி அல்லவா...?
விம்மி விம்மி அழுதவளோ ஒரு கட்டத்தில் தரையிலேயே கை கால்களை குறுக்கிக் கொண்டு படுத்திருக்க சிறிது நேரத்தின் பின் அவளறைக்குள் நுழைந்தவனுக்கு வருத்ததுக்கு மேலாய் கோபம்.
"எப்பப் பாரு அழுதுகிட்டே இருக்க வேண்டியது..சட்டயப் புடிச்சு நாலு அற விட்டு லவ்வ சொல்லாம அழுது வடியிற..? இது உனக்கே நல்லாருக்கா..?" இதழ்களுக்குள் முணுமுணுத்தபடி மென்மையாய் அவளைத் தூக்கி கட்டிலில் கிடத்தியவனின் இதழ்கள் இறுகி இருந்தாலும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்,என்றும் போல்.
தலையணையை வைத்து போர்வையால் போர்த்தி விட்டு நிமிர்ந்து அவள் முகத்தை தான் பார்த்திருந்தான்.
அழுதழுது களைத்துப் போயிருந்த முகத்தில் சோகம் அப்பிக் கிடக்க அவளை வருத்துகிறோமோ என்று அவனும் வருந்தாமல் இல்லை.
ஆனால்,அப்படி செய்யாவிடின் அவளை எப்படித் தான் மாற்ற..?
பெருமூச்சுடன் அவளின் கூந்தலை ஒதுக்கி விட்டு அவன் எழப் பார்க்க அவனின் ஸ்பரிசம் உணர்ந்ததாலோ என்னவோ அவனின் கரத்தை அவளின் இருகைகளும் பொத்திப் பிடித்தது.
தன்னுணர்வின்றிய அவளின் சிறு செயல் அவனை மொத்தமாய் புரட்டிப் போட்டிருக்க இதழ்கள் இப்போது மென்மையாய் முறுவலித்தன.
"லவ் பண்றியா என்ன..?" மென் குரலில் அவன் கேட்க உறக்கக் கலக்கத்தில் இருந்தவளுக்கு அது புரியாவிடினும் இதழ்களில் புன்முறுவல் பூக்க "ம்ம்" என்பதாய் முணகியவளின் செயலில் அவன் தேகம் சிலிர்த்தது.
"இப்ப கேட்டா சொல்லு..நேரா கேட்டா இல்லன்னு மாங்கு மாங்குன்னு தலயாட்டு..பாப்பாவா இருந்து படுத்தி எடுக்குற நீ.." மனதுக்குள் திட்டியவாறு மெதுவாய் கரங்களை விடுவித்துக் கொண்டு உச்சி முகர்ந்து விட்டு வெளியேறியவன் வந்து சென்றது கூட தெரியாத ஆழ்ந்த உறக்கம் அவளுக்கு.
●●●●●●●●
சில வருடங்களுக்கு முன்பு..
பொழுது புலர்ந்திருந்தாலும் பெரிதாய் வெளிச்சம் இல்லை.கரு மேகக் கூட்டம் நிரம்பியிருக்க தூறலாய் மழையும் கொட்டிக் கொண்டிருந்தது.
பாதி நனைந்த சுடிதாருடன் பேரூந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவளின் விழிகளோ பாதையை பேரூந்துக்காக அலசிக் கொண்டிருக்க முகத்தில் மெல்லிய பதட்டம்.
வேலைக்குச் சேர்ந்து முதல் நாளே தாமதமாக சென்றால் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்கின்ற பயம் தான் அந்த பதட்டத்தின் மூலக் காரணம்.
இன்னும் வந்து சேராத பேரூந்துக்கு வசை பாடிய படி அவளிருக்க அவளருகே வந்து நின்ற பெண்ணின் கண்கள் முன்னே நின்றிருந்தவனின் மீது ஒரு வித அசூசையுடன் படிய அப்போது தான் நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஏனோ அந்தப் பெண்ணின் செயலில் கோபம் வந்தது.
அந்த ஆடவனைப் பார்க்க அவனின் முகத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.சாதாரணமாகத் தான் இருந்தான்.
பழகிப் போனதாய் இருக்கும் என நினைத்துக் கொண்டவளுக்கு அவனைக் கண்டு பாவமாய் இருந்தாலும் தன் பார்வையில் அதை வெளிக்காட்டவில்லை.
சடுதியாய் திரும்பியவனின் பார்வை இவளின் முகத்தில் ஒரு நொடி படிந்து மீள எந்த வித உணர்வுமின்றி இருந்தது,அவள் வதனம்.
அதைக் கண்டு தோளைக் குலுக்கிக் கொண்டு அவன் இருக்க அந்த பெண்மணியின் கையில் இருந்த குழந்தை அடம் பிடித்து கீழே இறங்கிட அங்குமிங்கும் அலைந்த அந்த வாண்டையும் அந்த தாயின் பரிதவிப்பையும் ரசித்திருந்தாலும் அந்தப் பெண்ணின் மீது இருந்த கோபம் மறைந்து போகவில்லை,என்பதே உண்மை.
அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த வாண்டு அவனருகே செல்லப் பார்க்க பதறித் தவித்திருந்தார்,அதன் தாய்.
"செல்லம்..அங்கிள் கிட்ட போகக் கூடாது..இங்க வாங்க.." சிறுவனின் கையை பற்றி அந்தப் பெண் தூக்கிக் கொள்ள நின்றிருந்த ஐவரின் பார்வையும் அவன் மீது ஒரு கணம் படிந்து மீண்டது.
அவனுக்கும் வலித்திருக்குமோ என்னவோ..?யாருக்குத் தெரியும்..? ஆனால்,அவன் நின்றிருந்த தோரணையில் எந்த வித மாற்றமும் இல்லை.
ஒரு வேளை அந்த வாண்டு அவனருகே வந்திருந்தாலும் அவனும் ஒதுங்கித் தான் நின்றிருப்பான்.இத்தனை நாள் அவன் பட்ட அனுபவங்கள் அவனுக்கு சொல்லிக் கொடுத்த பாடங்களில் அதுவும் ஒன்றாயிற்றே,
சிறுவர்களிடம் நெருங்கக் கூடாது என்பது.
"யே மா அங்கித் கித்த போ கூதா..?"(ஏன் மா அங்கிள் கிட்ட போக கூடாது..?) மழலை மொழியில் குழந்தை கேட்ட கேள்விக்கு குழந்தை என்றும் பாராமல் ஏனோ கோபம் வந்தது,அவளுக்கு.
சிறு குழந்தை தான்.
அதுவும் புரிகிறது தான்.
ஆனால்,எழும் கோபத்தை அவளால் அடக்கத் தான் முடியவில்லை.காரணமில்லாத கோபம் இல்லை.அதன் பின் கடவுளின் காரணம் மறைந்திருப்பது இருவருமே அறிந்திட வாய்ப்புமில்லை.
"அது அங்கிள் கிட்ட போனா உனக்கும் அப்டி ஆயிரும்.." கிசுகிசுப்பாய் அந்தப் பெண் சொன்னாலும் சுற்றி இருந்த அனைவருக்கும் அது கேட்கத் தான் செய்தது.அவன் செவிகளிலும் தெளிவாய் விழுந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
"ஓ..அங்கித் பூ தாந்தியா..?"(அங்கிள் பூச்சாண்டியா..?)அவனின் முகத்தை பார்த்த அந்த வாண்டு ஒப்புவிக்க இவளுக்குத் தான் ஏகத்துக்கும் எகிறியது.
விட்டால் அந்தப் பெண்ணின் கன்னத்தில் ஒரு அறையை வைத்தே இருந்திருப்பாள்.இயல்புக்கு மாறாய் அத்தனை கோபமாய் வந்தது.
அதன் பின் யாரின் பேச்சுச் சத்தமும் கேளாதிருக்க அவளையும் நின்றிருந்த இன்னொருவரின் பார்வையையும் தவிர மற்றையவர்களின் பார்வை அவன் மீது ஒரு வித அசூசையாக விழ அவளுக்கே ஒரு வித சங்கடம்.
முழுக்கை சட்டை அணிந்து டக் இன் செய்து பார்மலில் இருந்தவனின் முதுகை துளைத்தது,அவள் பார்வை.அந்தப் பார்வையில் என்ன ஒளிந்திருந்ததென்று யாருக்கும் தெரியவில்லை.
மழை வலுக்க சற்றே முன்னேறி அவன் முதுகின் பின்னே வந்து நிற்க ஒதுங்கப் பார்த்தவனுக்கு மழை வழி வகுக்கவில்லை.
பொதுவாகவே அவனருகே ஆட்கள் நிற்க விரும்பாதிருக்க யாரேனும் அருகில் வந்தாலே அவனும் பெரும்பாலும் ஒதுங்கிக் கொள்வது வழக்கமாய் இருந்தது,அந்த நாட்களில்.
அதன் பின் அந்த வழக்கம் மறைந்து போயிருந்தாலும் எப்போதாவது அவனை மீறி வெளிப்பட்டு விடும்.
அதைத் தான் இப்போதும் செய்ய முயன்று தோற்று நின்றவனில் இருந்து ஈரடி பின்னே நின்றிருந்தாள்,அவள்.
அமைதியாய் இருந்த வாண்டு திடீரென கத்திக் கொண்டு அழ பரவிய சத்தத்தில் ஒரு கணம் அவளே அதிர்ந்து விட்டாள்.அடித் தொண்டையில் ஒரு கத்தலை தொடர்ந்து ஏங்கி ஏங்கி அழ எத்தனை சமாதானப்படுத்தியும் ஓயவில்லை,அதன் அழுகை.
ஏற்கனவே அவளுக்கு அந்த குழந்தையின் மீதும் தாயின் மீதும் ஏகப்பட்ட கோபம்.இப்போது அழுகையும் பெரும் எரிச்சலை தந்தது.
"இதுங்க ரெண்டயும் புடிச்சி வெளில தள்ளி விட்டா தான் நிம்மதி..கொழந்தயா அது..என்ன பேச்சு பேசுது.." அவள் தன்பாட்டுக்கு திட்ட முன்னே நின்றிருந்தவனுக்கு அதைக் கேட்டு கொஞ்சம் கோபம் வந்தாலும் அது அவனுக்கான கோபம் என்று அவனுக்கு புரிந்திடும் சாத்தியம் இல்லை.
"இந்த பஸ்ஸு வேற எங்க போச்சு..காலைலயே தல வலி வர்ர மாதிரி இருக்கு..ப்ச்.." முணுமுணுத்த படி இருந்தவளின் பார்வை அந்த குழந்தையில் வந்து நிற்க சட்டென்று ஒரு யோசனை.
"ஆன்டி கொழந்தய கொடுங்க நா பாக்கறேன்.." வேண்டுமென்று அழைத்து அந்தப் பெண்ணிடம் கேட்க அவரின் முகம் தான் அஷ்டகோணலாகி விட அவளுக்கு ஏதோ ஒரு சின்ன சந்தோஷம்.
அவனிடம் வீசிய வார்த்தைகளுக்கு அவளின் இந்த எதிர்வினை என்று காரணம் புரிந்தாலும் அதற்கு என்ன காரணமென்று கேட்டால் "தோன்றியது செய்தேன்"என்பாள்,அவ்வளவே.
அந்த நிமிடம் அவனை காயப்படுத்தியதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்கின்ற முனைப்பு மட்டுவே அவள் மனதில்.அவனுக்காக ஏன் செய்ய வேண்டும் என்று மனசாட்சி வினா எழுப்ப சத்தியமாய் அவளிடம் பதிலேதும் இல்லை.
பதில் இல்லா சில கேள்விகளுக்கு தான் அதிக தேடல் இருக்கும்.
அதே போல் அவளிடம் உதித்த இந்த வினாவில் தான் அவளின் வாழ்க்கைத் தேடலே ஒளிந்திருக்கிறதென்பது அவளே அறிந்திரா விடயம்.
முகத்தை சுளித்து விட்டு அந்தப் பெண் குழந்தையை கொடுக்காது வெடுக்கென மறுபுறம் திரும்பி கொள்ளவும் பேரூந்து வரவும் சரியாய் இருந்தது.
குடையை விரித்துக் கொண்டு அவன் அந்த சிறு தூரத்தை கடக்க முயன்ற சமயம் நனைந்த படியே ஓடிப் போய் பேரூந்தில் ஏறிக் கொண்டவளுக்கு யன்னலோர இருக்கை ஒன்று கிடைக்க சாவகாசமாய் அமர்ந்து யன்னலை திறந்து விட்டவளுக்கு தெறித்த தூறல் எல்லாம் கணக்கில் பதியவே இல்லை.
சனம் அவ்வளவாய் இல்லை,பேரூந்தில்.
அசௌகரியமாய் ஏறிக் கொண்டவன் அமர காலியாய் இருந்தது,அவளுக்கு பக்கத்தில் இருந்த இடமே.
தேடல் நீளும்.
2024.03.17