Total Views: 17584
காதலொன்று கண்டேன்!
தேடல் 07
அவளுக்கென..
தலையசைப்பை பதிலாகக் கொடுத்தவனை கண்டதும் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல தோன்றியது,தரணிக்கு.
அரிதான சந்தர்ப்பங்களில் காளையின் அமைதி கண்டு அவனுக்குள் கோபம் பற்றி எறிவது உண்மை.ஆனால்,என்ன மனதுக்குள்ளால் மட்டுந்தான்.
முகத்தில் காட்ட முற்பட்டால் காளையவனின் கண்டிப்பான பார்வை இருந்த கோபத்தை அணைத்து கலக்கத்தையல்லவா உண்டு பண்ணி விடும்..?
காரை பார்க் பண்ணி விட்டு நடந்தவனின் நடையில் ஒரு வித நிமிர்வு.எதையும் தனியாகவே கடந்து வந்து நினைத்ததை சாதிப்பவர்களில் தனித்துவமாக இருக்கும் அதே நிமிர்வு தான் கொட்டிக் கிடந்தது,அவனின் நடத்தைகளிலும் உடல்மொழியிலும்.
நடந்து வந்தவனோ கோர்ட்டை கழற்றி ஒரு கரத்தில் தொங்க விட அதே கரத்தின் விரல்கள் அலைபேசியை தாங்கியிருந்தன.மறுகரமோ பேன்ட் பாக்கெட்டில் நுழைந்திருக்க அவனின் நடையில் மிளிர்ந்த கம்பீரமும் அவனின் தோரணையும் ஏனோ காளையை அத்தனை அழகாய் காட்டியது.
அடிக்கடி சிகைக்குள் விரல் நுழைத்து அதை கலைத்து விடும் மேனரிசம்..
யார் பார்த்தாலும் பார்வையை அவனின் புறம் ஒரு நொடியேனும் கவர்ந்திழுக்கும்.
அவனின் வருகைக்காக வேண்டி வாயிலில் நின்றிருந்த தர்மேந்திரனைக் கண்டதும் இந்த வயதிலும் தனக்காக நிற்கிறாரே என கொஞ்சம் கோபம்.
இறுகிய முகத்துடனேயே அவர் முன்னே செல்ல அந்த முகமே அவருக்கு உணர்த்தி விட்டிருந்தது,அவனின் கோபத்தை.
"வா பா..உனக்கு கட்டாயபப்டுத்தி வர வச்சா புடிக்காதுன்னு தெர்யும்..பட் வேற வழி இல்ல..வா.." என்று அவனின் தோளில் கை போடவும் அலைபேசியுடன் ஓரமாய்ச் சென்றிருந்த தரணி மூச்சிறைக்க ஓடி வரவும் சரியாய் இருந்தது.
"வா தரணி..உங்க பாஸ நா சொன்ன மாதிரி அழச்சிட்டு வந்ததுக்கு தேங்க்ஸ்."என்க தரணியோ திருதிருவென விழிக்க அவனின் பார்வையோ தரணியை கடுமையுடன் தீண்டியது.
"இ..இல்ல சா..சார்.."
"நாளக்கி ஆபிஸ் வாங்களேன் தரணி.." குரலில் இருந்த கடினத்துக்கு சற்றும் சம்பந்தமின்றி வரவழைத்த புன்னகையுடன் காளை சொல்ல வயிற்றில் இருந்து எழுந்து வந்த பயப்பந்து தொண்டையை அடைத்திட பலியாடு போல் தலையாட்டினான்,பாவப்பட்ட பி ஏ.
"ஜீவா..உள்ள வா..அவன மொறச்சிகிட்டு இருக்காம.."என்றபடி ஜீவாவை அழைத்துச் செல்ல தர்மேந்திரனுக்கு சபித்த படி அவர்களின் பின்னூடு நகர்ந்திருந்தான்,தரணி.
அதே நேரம்,
"அப்றம் என்ன ஆச்சுமா..?"
"நா அந்த பையன பாக்க சொல்லி இந்த மித்ரா கிட்ட சொன்னேன்..அவ எங்க பாக்கறது..? அம்சமான பையன் தீப்தி..அவ்ளோ அழகு சிரிக்கிறப்போ..திருஷ்டி சுத்திப் போடனும் போல இருந்துச்சு.."
"வயசு ஏற ஏற உங்கம்மாக்கு வெவஸ்தயே இல்லாம போச்சி தீப்தி..பாக்கற எல்லாரயும் சைட் அடிச்சிகிட்டு இருக்காங்க..அதுவும் வயசுப் பொண்ண பக்கத்துல வச்சிகிட்டு..சித்தப்பா தான் பாவம் இந்த மனுஷிய வச்சிட்டு என்ன பாடு பட்றாரோ தெரியல.." தலையில் அடித்துக் கொண்டவளை முறைத்து தள்ளினார்,அவளின் சித்தி.
"போடி பொசகெட்டவ..ரசன கெட்டவ நீ.."
"ம்ம்க்கும்..சரி இன்னிக்கி தான் யாரோ வர்ராங்கன்னு சொன்னீங்களே..கார் சத்தம் கேட்டுச்சு..கீழ போகல.."
"லேடிஸ் யாரும் வர்லன்னு சொன்னாங்க..அதனால தான் போகல..ஏன் இப்ப உனக்கு என்ன இங்க இருந்து வெரட்டி விட்ரனுமா..?"
"ச்சே..அப்டியெலாம் இல்ல சித்தி.." என்றவளோ தன் உடைகளை மடிக்கத் துவங்க அப்போது தான் அவளின் சித்திக்கு அடுத்த அறையில் அலைபேசி இருப்பது நினைவில் வர அதை எடுக்க வெளியில் வந்திட அவரை புருவம் சுருக்கி பார்த்தனர்,மற்றைய இருவரும்.
"இருங்கடி என் போன எடுத்துட்டு வர்ரேன்.."
"ம்ம்.."
வெளியில் வந்தவரின் பார்வை தற்செயலாய் கீழே படிய அவர் நின்றிருக்கும் இடத்தில் இருந்து பார்க்கையில் ஜீவாவின் உருவம் ஏதோ மங்கலாய்த் தெரிந்தது.
தெளிவாய்த் தெரியாவிடினும் இன்று கண்ட பையன் தான் என மனம் வாதிட விடுவிடுவென அறைக்குள் சென்று தன் கண்ணாடியை எடுக்க மித்ராவுக்கு அவரின் செயலுக்கு காரணம் புரியவே இல்லை.
மூக்குக் கண்ணாடியை போட்டுக் கொண்ட பார்த்தவருக்கு அவரின் கணிப்பு பிழையாகவில்லை என்கின்ற நிம்மதி ஒரு புறம் என்றால் மித்ராவுக்கு அவனை அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் அதற்கு மேலாய்.
"அடியே மித்ரா..தீப்தி..அந்த பையன் வந்திருக்காரு டி.." கொஞ்சம் சத்தமாய் சொல்லிக் கொண்டு வந்த சித்தியின் வாயை எட்டிப் பொத்திய மித்ராவின் முகத்தில் கடுப்புத் தெறித்தது.
"ஷ்ஷ்ஷ்..சித்தி மெதுவா கீழ இருக்குறவங்களுக்கு கேக்க போகுது.." என்று அதட்டியவளின் கரத்தை கடிக்கப் பார்க்க சட்டென விலக்கிக் கொண்டவளின் மீது விட்டேற்றியாய் படிந்தது,அவர் பார்வை.
"அது ஒன்னும் கேக்காது..நீ வா..நா அந்த பையன காட்டியே ஆகனும்.." அவள் மறுக்க இழுத்துக் கொண்டு செல்ல தாயின் செயலைக்கண்டு தலையில் அடித்த படி அவர்களுடன் நடந்தாள்,தீப்தி.
ஹேன்ட் ட்ரில் கம்பியில் கரத்தை பதித்த படி எட்டிப் பார்த்த மித்ராவின் விழிகளில் அதிர்வென்றால் தீப்தியின் முகத்தில் அப்பட்டமான கலவரம்.
"இவரு தான் மா நா திட்டிட்டு இருந்த எம் டி.." அவனில் இருந்து பார்வையை விலக்காமலே தீப்தி சொல்ல மித்ராவின் முகத்தை ஆராய்ந்தன,அவள் விழிகள்.
"மித்ரா எனக்கு எம் டி..நீ எதுக்கு ஷாக்காகி இருக்க..?"
"கோயில்..கு..குங்குமம்.." வார்த்தைகள் கோர்வையின்றி வந்தாலும் அவளின் சித்திக்கு விடயம் புரிந்தது.
"இன்னிக்கு இவரு மேல தான் இவ குங்குமத்த கொட்டி விட்டா கோயில்ல..ஆனாலும் பையன் செம்ம ஸ்மார்ட்ல.." சிலாகித்த படி அவர் கூற தீப்திக்கு கடுப்பேறிற்று.
"பாக்குறதுகு நல்லா இருக்கும்..பழகுனா புரியும் எப்டின்னு.." என்றவளின் விரல்களோ மித்ராவை உலுக்க கலைந்தவளோ மலங்க மலங்க விழித்தாள்.
"நீ எதுக்கு டி பேயடிச்ச மாதிரி இருக்க..? சித்தி கேட்க மறுப்பாய் தலையசைத்தவளோ உள்ளே செல்லப் பார்க்க கம்பியில் இடையிடையே இருந்த அலங்கார வடிவமொன்றின் இடைவெளியில் சிக்கிக் கொண்டது,அவளின் துப்பட்டா.
மூவரும் முன்னே ஈரெட்டு எடுத்து வைத்திருக்க துப்பட்டா இழுபட்டதிலேயே அது மாட்டுப் பட்டிருப்பது புரிய தலையில் அடித்தவளாய் மீண்டும் ஹேன்ட் ட்ரில் கம்பியின் அருகே வந்து எடுக்க முனைந்த சமயம் ஏதோ தோன்றியிருக்க வேண்டும்,காளையவனுக்குள்.
எதார்த்தமாய் என்றுமில்லாமல் மேலே பார்த்தவனின் விழிகளுக்குள் சிக்கிக் கொண்டது,அவளுருவம்.
துப்பட்டாவை எடுக்கும் மும்முரத்தில் இருந்தவளுக்கு அவனின் பார்வை புரியவில்லை என்பது வேறு விடயம்.
நொடி நேரப் பார்வை தான்.அவளைப் பார்த்ததில் அவனுக்குள் எந்த தடுமாற்றமும் நேரவில்லை என்றாலும் அவளின் பதட்டமான செயல் அவன் மனதில் பதிந்து போனது என்னவோ உண்மை.
அதிலும் அவளை அவன் விழிகள் இனம் கண்டு கொள்ள விட்டேற்றியான பாவத்துடன் விழிகள் இயல்பு மீண்டாலும் அந்த இயல்பு இனி அவள் முன் கொஞ்சம் கொஞ்சமாய் தொலையப் போவது தெரிந்திருந்தால் சுதாரித்துக் கொண்டிருப்பானோ..?
அவர்கள் சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது ஒன்பது மணியை எட்டியிருக்க அதன் பின்னே தான் கீழே வந்தனர்,பெண்கள் மூவரும்.
தீனதயாளனும் தர்மேந்திரனும் அவர்களுடன் வெளியே செல்வதாக இருந்தனர்.
ஆண்கள் யாவரும் கிளம்பிச் சென்றிருக்க சமயலறைக் கட்டில் ஏறி அமர்ந்து தீப்தி எதையோ கொறித்த படி இருக்க குளிர்சாதனப் பெட்டியில் உண்பதற்கு எதையாவது தேடிக் கொண்டிருந்தாள்,மித்ரா.
"இந்த வீட்ல சாப்புர்ரதுக்கு ஒன்னுமே இல்ல..போயும் போயும் ஒரே ஒரு சாக்லேட்.." திட்டிய படி சாக்லேட்டை பிரித்து வாயில் வைத்தவளை ஏக்கமாய் பார்த்த சித்திக்கு முதுகு காட்டி நின்று கொண்டவளின் செயலில் தீப்திக்கு சிரிப்பு வந்து விட்டிருந்தது.
"அம்மா..இன்னிக்கி இன்சுலின் வேற போடல..கொஞ்சம் வாய கட்டிகிட்டு இரு.." திட்டிக் கொண்டு இருக்கும் போது ஒலித்தது,அவளின் அலைபேசி.
தந்தையின் எண்ணைக் கண்டதும் புருவம் சுருக்கிய படி ஏற்றுக் கொண்டவளுக்கு அவர் சொன்ன செய்தியில் கோபமாய் வந்தது.
"என்னடி போன் பேசும் போதே கடுகடுன்னு ஆயிட்ட.."
"உன் புள்ள கார் சாவிய வச்சிட்டு பொய்ட்டானாம்..அத எடுத்து வந்து தர சொல்றாரு.." என்ற படி அலைபேசியை ஓரமாய் வைக்க மித்ராவுக்கு புரிந்தது,தான் தான் பலியாகப் போகிறோம் என்று.
"மித்ரா.."
"அடி மித்ரா.."
இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல கை நீட்டி தடுத்தவளுக்கு அவர்கள் சொல்லப் போவது தெரியும் அல்லவா..?
"நானே எடுத்துட்டுப் போறேன்.." கடுப்புடன் ஒப்புவித்து விட்டு நகர்ந்தவளோ தயாளனின் அறைக்குள் நுழைந்து கார் சாவியை எடுத்துக் கொண்டு வாயிலுக்கு செல்ல அங்கு தான் நின்றிருந்தான் காளை,அலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டு.
அவனைக் கண்டதும் அவளுக்கு திக்கென்றாக தலையை குனிந்த படி தயாளனிடம் கார் சாவியைக் கொடுத்து விட்டு உள்ளே ஓடி வந்து கொண்டிருந்த சமயம் அவளுக்கு எதிர்ப்பட்டான்,காளை.
மோதாமல் நொடியில் சுதாரித்துக் கொண்டவளுக்கு பயத்தில் இதயம் அதி வேகமாய் துடிக்க ஒரு கணம் அனைத்துமே ஸ்தம்பித்து போன நிலை தான்.பெரிய விழிகள் இன்னுமே விரிந்து கொள்ள கருமணியில் அவன் விம்பம் மட்டும்.
இமைகள் இமைக்க மறந்திட சுவாசம் அழுந்தியது போல் இருந்தது. இதழ்கள் பிளந்து மூச்சுக்காற்றை உள்ளிழுத்துக் கொள்ள அவள் அவளாய் இல்லை.
ஆண்களுடன் பெரிதாக பேசுவதில்லை என்றாலும் ஓரளவுக்கு பேசியிருப்பவள் தான்.
ஆனால்,காளையின் முன் படபடத்து நிற்கையில் மூச்சடைத்தது.பெரும் தடுமாற்றம் உள்ளுக்குள் உருவெடுத்தது.அழுத்தமான பெண்ணவளிலும் நுண்ணிய உணர்வொன்று படையெடுத்தது.என்றுமில்லா உணர்வுகளின் ஆக்கிரமிப்பு இயல்பாய் இருக்க முடியாமல் படுத்தி எடுத்தது.
சட்டென விலகி நின்றவள் நகரப்பார்க்க வழி மறித்து நின்றவனின் முகத்தில் அனல் படர்ந்திருக்க அந்த விழிகளை எதிர்நோக்கும் தைரியம் அவளிடம் இல்லை.
ஒரு நொடி விழி நிமிர்த்தி பார்த்தாள்.ஏன் செய்தாள் என்று அவளுக்கே தெரியாது.நான்கு விழிகளும் நேர் கோட்டில் சந்தித்துக் கொள்ள அவன் விழிகளில் பயமும் தடுமாற்றமும் நிறைந்திருக்க அவன் விழிகளில் கோபம்.
வெட்டிக் கொண்டு கத்திமுனைப் பார்வையை அவள் விழிகளுக்குள் பாய்ச்சி நின்றவனோ முழுதாய் விரிந்து நின்ற அவளின் காந்த விழிகளுக்குள் அந்த ஒரு நொடி சிறைப்பட்டது உண்மை தான்.
அந்த ஒரு கணத்தில் பயத்துடன் உருண்ட அவளின் கருமணிகளும் அழுத்தமாய் ஒட்டி மெதுவாய் மீண்ட அவள் இமைகளும் காளையவனின் கவனத்தை களவாடியிருந்ததே.
தன்னைக் கேளாமலே அவனின் கருமணிளும் அசைந்து அவளின் விழிகளை ஆராய்ந்தது.
சுற்றம் முற்றும் அவன் சிந்தையில் இல்லை.அவனைப் பற்றிய நினைப்பும் காணாமல் போயிருந்தது.அந்த நொடி அவனின் மனம் முழுவதும் அவள்..ம்ஹும் அவள் விழிகள் மட்டுமே.
காலையில் அவள் தெரியாது கரத்தைப் பற்றிய போது இப்படி ஒரு மனநிலை அவனுள் இருக்கவில்லை.ஏன் சற்று முன் அவள் விம்பம் விழுந்ததும் கூட இயல்பாய் கடந்திட முடிந்தவனால் அவளின் பார்வையை சற்று நெருக்கத்தில் கூட இயல்பாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
காலையில் மலங்க மலங்க விழித்தவளின் பார்வையில் இல்லாத ஏதோ ஒன்று இப்போது இருப்பதாக மனம் அடித்துக் கொள்ள உள்ளுக்குள் புயலடித்தாலும் அதை காட்டிடாமல் கெத்தாய் தான் நின்றிருந்தான்,
அவனும்.
அவனறிந்து முதன் முதலாய் அவனில் ஒரு தடுமாற்றம்.இதுவரை இப்படி பெண்கள் யாரும் அவனை நேருக்கு நேர் பார்த்தது இல்லை.அதுவும் அவள் பார்வையில் இருக்கும் நுண்ணிய விடயமொன்று அவனையே ஆட்டம் காண வைத்ததே.
"பாத்து வர மாட்டீங்களா..? கடுகடுத்த குரலில் அவன் கேட்க என்ன பதில் சொல்வாள் அவளும்.
"சா..சாரி.." நடுங்கிய குரலில் சொன்னவளின் முகத்தில் இருந்து பயமும் கண்களில் மின்னிய மிரட்சியும் அவனை நன்றாகவே புரட்டிப் போட ஏனென்று சத்தியமாய் புரியவில்லை.முற்றாய் அவள் விழிகளுக்குள் தொலைந்து போக மனம் முடிவெடுத்ததோ என்னவோ இமை முடிகளோ முட்டிக் கொள்ள மறந்து நின்றிருக்க அவளுக்குத் தான் இன்னும் பயமெடுத்தது.
"ஜீவா.." தர்மேந்திரனின் கத்தல் அவன் செவியை அடைக்க திடுக்கிட்டு கலைந்தவனுக்கு தன் மீதே அப்படியொரு கோபம்.
"கெட் லாஸ்ட் இடியட்ட்ட்ட்..." கடுப்புடன் கத்தியவனின் குரலில் அவளுக்கு கண்கள் கலங்கியே விட்டன.
பதில் கூட மொழியாமல் விம்மிய படி ஓடியவளை ஒரு கணம் தொட்டு மீண்டது,காளையின் விழிகள்.
அந்த விழிகளில் என்ன தான் தெரிந்தது..?அவன் சொன்னால் தான் தெரியும்.
●●●●●●●●●
விடியலின் பின் உறக்கத்தை தழுவியவனுக்கு விழிப்புத் தட்ட சற்று தாமதமாகி இருந்தது.
எழும் போதே எட்டு மணி தாண்டியிருக்க தரணிக்கு அழைப்பெடுத்து சற்று தாமதமாக அலுவலகம் வருவதாக சொன்னவனுக்கு சோர்வும் வேறு.
வியர்வை தேங்கியிருந்த உடலை துவாயால் துடைத்த படி வந்த ஜீவாவிற்கு நேற்றிரவு உறக்கம் முற்றாய் தொலைந்திருந்தது.
விழி மூடினால் அவள் விழிகளே வந்து நிற்க ஒற்றைப் பார்வைக்கு இத்தனை எதிர்வினை தன்னிடம் இருக்கும் என்று கனவில் கூட நினைத்ததில்லையே,காளை.
அதிலும் அவள் விழி நிமிர்த்தி பார்த்த கணம் அவன் உறைந்து போன நிஜத்தை கொஞ்சமேனும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை,அவனால்.
ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் அவள் பார்வையில் அவன் கரையத்துவங்கியது மறுக்க முடியாதது அல்லவா..?
அடிபணிய வைக்க முயலும் எதையும் மனம் ஏற்றுக் கொள்வதில்லையே.அதை ஒத்த செயல் தானே காளையின் இந்த மறுப்பும்.
தான் அத்தனை பலவீனமானவனா..? மனம் கேட்ட கேள்விக்கு என்ன பதிலைத் தான் சொல்லிட..?
கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தவனுக்கு என்றுமின்றி ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாய் தோன்றிற்று.
அவனுணர்ந்தே இருந்தான்,அவனின் மொத்த இயல்பும் அந்த ஒரு நொடிப் பார்வையில் அவனை விட்டு வெகு தூரம் போயிருந்ததை.
கோபமும் ஆற்றாமையும் வந்து சேர அப்படியே ஷவரின் அடியில் வந்து நின்றவனின் மேனியில் ஓடிய நீர்த்திவலைகள் அவனை இயல்பாய் மாற்ற முயன்று வெற்றியும் கண்டது.
இனி அவளை பார்த்தாலும் அவன் தடுமாறப்போவதில்லை என்று மனம் உறுதியாய் நம்பிற்று,சற்று நேரத்தில் அது முற்றாக தகர்வுறப் போவது தெரியாமல்.
தலையை துவட்டிய படி வெளியே வந்தவனின் மேனியை ஆர்ம் கட் டீஷர்ட்டும் முக்கால் ஷார்ட்ஸும் தழுவியிருந்தது.
அழைப்பு மணி சத்தம் கேட்க தரணியை தவிர அவனின் பிளாட்டுக்கு யார் வருவது என உணர்ந்தவனின் மனதில் கோபம்.
"இன்னொரு கீய கொடுத்தாலும் தெறந்துட்டு வர மாட்டான்.." திட்டிய படி நகர்ந்தவனின் கரம் இன்னும் சிகையை துவட்டுவதை நிறுத்தியிருக்கவில்லை.
"ப்ச்ச்ச்..உனக்கு எத்தன தடவ தான் சொல்றது..கதவத் தெறந்துட்டு வான்னு.." சலிப்புடன் சத்தமாய் கூறிய படி கதவைத் திறந்து விட்டவனின் குரலில் அதிர்ந்து நின்றிருந்தாள்,மித்ரா.
தேடல் நீளும்.
2024.03.23