Total Views: 40702
அத்தியாயம்-11
தன்முன் இருந்த புகைப்படங்களை ஒருவித அதிருப்தியோடு பார்த்துக் கொண்டிருந்த யஷ்வந்தின் முகபாவமே வினோத்துக்கு அவனின் பதிலைக் கூறியது. அதில் ஒரே ஒரு நொடி ஆயாசமாக உணர்ந்தபோதும் அவனது சிறந்த படைப்புக்கு அவன் சிறந்த பெண் தேடுவது நியாயம் தானே என்று தன்னைத் தேற்றிக் கொண்டான்.
“ப்ச்.. நோ வினோத். இவங்க யாருமே செட் ஆகமாட்டாங்க. வெறும் பொம்மைக்கு கட்டிவிட்டு டிஸ்ப்லே பண்ண எனக்கு தெரியாதா? ஐ நீட் தி ஃபீல் ஆஃப் லைவ். அந்த உயிர்ப்பு வேண்டும். அதுக்காகத்தான் ரியலா ஒரு பொண்ணுக்கு கட்டி ப்ரொஜெக்ட் பண்ண நினைக்குறேன்” என்று யஷ்வந்த் முதன்முறை தனக்கு இப்படி நீளமாய் ஒரு விளக்கம் கொடுப்பதில் சற்றே அதிருப்தியடைந்தான் வினோத்.
இதுவரை அவன் பார்வைக்கு பொருளுணர்ந்து நடந்தவனுக்கு இன்று அவன் விளக்கம் கொடுப்பது, தான் சரியாக நடந்துக் கொள்ளவில்லையோ என்ற உணர்வைக் கொடுத்தது.
“சாரி சார் வேற பாக்குறேன்” என்று வினோத் கூறிச் செல்ல, தன் இருக்கையில் தலை சாய்த்து கண்களை மூடிக் கொண்டான்.
அங்கு தனது அலைபேசியில் வந்த மின்னஞ்சலைக் கண்டு நெஞ்சில் கைவைத்துக் கொண்டு அமர்ந்திருந்த யாழினியை அவள் தோழி பலமுறை அழைத்தும் பதிலேதும் கூறாது அதே நிலையில் அமர்ந்திருந்தாள்.
அப்படி அந்த மின்னஞ்சலில் வந்தது 'என்னோட காஸ்டியூமுக்கு மாடலரா வரியா?’ என்பது தான். 'எவ்வளவு தைரியம் இவருக்கு?’ என்று ஒருபக்கம் கோபம் வந்தபோதும் மறுபக்கம் பயம் அவளை ஆட்டுவித்தது. 'யஷ்வா அண்ணாக்கு மட்டும் தெரிஞ்சதுனா..’ என்று அவள் எண்ணுகையிலேயே ‘உங்க அண்ணனுக்காக தானே யோசிக்குற? ஓகே நான் அவன்கிட்டயே பேசிக்குறேன்' என்ற மின்னஞ்சல் அவளை மயங்கி விழாத குறையாக படுத்தியது.
அன்றைய நாள் முழுதும் ‘ஐயோ இவரு வீம்பு புடிச்சவராச்சே.. அண்ணாகிட்ட கேட்டிருப்பாரோ? அப்படிமட்டும் இருக்கவே கூடாது. கடவுளே எனக்கு ஏன் இந்த சோதனை? படுத்தி எடுக்குறாரு. ஒன்னு இவங்கள ஒன்னு சேர்த்துவை, இல்லை என் மனசுல இருந்து இவரு நெனப்ப தூக்கி போடு' என்று அவள் புலம்பிக் கொண்டே இருக்க, வீடு வந்து சேர்ந்தவளுக்கு நெஞ்சுக் கூடு பதறித் துடித்தது.
முன்னறை ஃசோபாவில் யோசனையான முகபாவத்துடன் அமர்ந்திருந்த யஷ்வந்தைக் கண்ட யாழினி,
‘அய்யோ, அம்மா அண்ணினு யாருமே இல்லை போலயே. இந்த அஞ்சனாவும் ஆளைக் காணும். என்னிக்குமில்லா திருநாளா இன்னிக்கு முகத்துல எக்ஸ்பிரஷனோட வேற இருக்காரு. என்ன குழப்பம்? ஒருவேள கேட்டுட்டாரா?’ என்று தன் மனதோடு பதறியபடி, இயல்புபோல் முகத்தை வைத்துக் கொண்டு அவள் அப்படியே மேலே செல்ல எத்தனிக்க, அவளது அரவத்தில் அவளை உணர்ந்தவனாய் “யாழி” என்று அழைத்தான்.
அதில் திடுக்கிட்டு திரும்பியவள் “அ..அண்ணா” என்க, ‘இங்கே வா' என்பது போல் சைகை செய்தான். தட்டுத்தடுமாறி அவனிடம் வந்தவள் கேள்வியும் பீதியுமாய் நோக்க, “உன்னால மாடலிங் பண்ண முடியுமா?” என்று கேட்டான்.
அவ்வளவு தான்.. “அண்ணா.. நா.. நான் எதுவுமே சொல்லலை. அவர் தான் தே..தேவையில்லாம.. நான் எதுக்குமே ரெஸ்பான்ட் பண்ணலை அண்ணா” என்று அவள் உலற,
“என்ன உலறுற?” என்று கேட்டான்.
யஷ்வந்தைப் புரியாமல் பார்த்தவள் “மா..மாடலிங் யாருக்கு?” என்று திணறலாய் வினவ, அவளை ஒற்றைப் புருவம் உயர்த்தி பார்த்தவன்,
“அர்ஷித் கேட்டானா?” என்று கேட்டான். 'ஆத்தீ.. நான் தான் உலறிட்டேனா?’ என்று எண்ணியவள் தலையைத் தாழ்த்தியபடி ‘ம்ம்’ என்று கூற,
“ம்ம்.. நானும் அதுக்கு தான் கேட்க கூப்பிட்டேன். என்னோட சாரிக்கு மாடலிங் பண்ண முடியுமானு” என்று இயல்பாய் பதில் கூறினான்.
அதில் அண்ணனை புரியாது பார்த்தவள் “அ..அண்ணா” என்க,
“உனக்கு ஓகேவா?” என்று கேட்டான். அவள் அப்போதும் பேசாது நிற்க,
“ஹி இஸ் அ பிஸ்நெஸ் மேன். அவனோட பிராடெக்ட் டிஸ்ப்லே பண்ண உன்னை மாடலிங்கு கேட்குறான். அதுக்கு நான் என்ன சொல்ல போறேன்? அன்ட் நீ இன்னும் யுவனா இன்டஸ்ட்ரீஸ்குள்ள நுழையலை. யுவனா இன்டஸ்ட்ரீஸ்ல நீயும் ஒரு பார்ட் ஆன பிறகு அவன் கேட்டா தான் போகக் கூடாது. அவன் கேட்கவும் மாட்டான்” என்றவன் வரிகளில் ‘அதுக்கு’ என்ற சொல்லில் மட்டும் கூடுதல் அழுத்தம் இருந்தது. 'அதுக்கு மட்டும்தான்' என்ற பொருள் அந்த அழுத்தத்தில் சொல்லாமல் சொல்லப்பட்டது.
“இல்ல அண்ணா. எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை” என்று அவள் கூற,
“அர்ஷித்கு மாடலிங் பண்ண இன்ட்ரஸ்ட் இல்லையா இல்ல மாடலிங்கே பண்ண இன்ட்ரஸ்ட் இல்லையா?” என்று கேட்டான்.
'ஐயோ ராமா..’ என்று எண்ணியவள் “ரெண்டுமேதான் அண்ணா” என்று கூற, “ம்ம்..” என்று தோள் குலுக்கலுடன் திரும்பிக் கொண்டான்.
ஒரு பெருமூச்சு விட்டு ஓட்டமும் நடையுமாய் தன்னறைக்கு வந்தவள் ‘இவங்க ரெண்டுபேரும் எனிமியா ஃபிரண்ட்ஸா?’ என்று தான் தோன்றியது.
கீழே மீண்டும் தனது யோசனையில் ஆழ்ந்திருந்த யஷ்வந்தின் அருகே துள்ளலுடன் வந்த அஞ்சனா, “யஷு மாமா” என்று உற்சாகமாய் அழைத்தாள்.
அவள் அழைப்பில் நிமிர்ந்த யஷ்வந்த் அவளையே பளிச்சென்று பார்வையோடு நோக்க, “இன்னிக்கு என் ஃபிரண்ட் ஒருத்தனோட பர்த்டே மாமா. நாங்க போய் அவனுக்கு சர்ப்ரைஸா கேக்லாம் கட் பண்ணோம்” என்று உற்சாகமாய் கூறினாள்.
'சிம்பில் அன்ட் எலிகெண்ட் ஃபேஸ், சைல்ட் லுக், ஸ்மைலிங் ஐஸ்' என்று மனதில் அவளை வர்ணித்துக் கொண்டவன், “அஞ்சனா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று வினவினான்.
அவனை புரியாமல் பார்த்தவள் “ஹெல்ப்பா? நானா? நான் என்ன மாமா ஹெல்ப் பண்ணனும்?” என்று கேட்க,
சுருக்கமாக அப்போட்டியைப் பற்றி கூறினான்.
“ம்ம் தெரியும் மாமா. நாலு வருடத்துக்கு ஒருமுறை நடக்கும்ல? அஜுக்கு அதுல கலந்துக்க ரொம்ப இன்ட்ரஸ்ட். ஆனா டிசைனிங் பண்ற அளவு இன்னும் கத்துக்கலை நல்லா கத்துட்டு தான் ரெஜிஸ்டர் பண்ணனும்னு சொல்லுவான்” என்று அவள் கூறிய பின்பே அவள் படிக்கும் படிப்பே அவனுக்கு நினைவு வந்தது.
“ம்ம்.. அதுல நான் செலக்ட் ஆயிருக்கேன்.. அதுக்..” என்று அவன் பேசுவதற்குள்,
“வாவ் சூப்பர் மாமா. கங்கிராஜுலேஷன்ஸ்” என்று கூறினாள்.
இதுவரை பாராட்டுக்களை பெறாதவன் இல்லையவன். அனைத்து பாராட்டுக்களையும் சன்னமான புன்னகையோடோ, தலையசைப்போடோ கடந்தவனுக்கு இப்பூவவளின் பாராட்டு ஒருவித உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது.
அதில் அழகாய் இதழ் பிரித்து சிரித்தவன், “என்னை பேச விடுடி” என்க,
“அச்சோ.. சாரி சாரி மாமா. சொல்லுங்க. இதுல நான் என்ன ஹெல்ப் பண்ணனும்?” என்று வினவினாள்.
அதே புன்னகையுடன் “நான் ஒரு சேரி ரெடி பண்ணிருக்கேன். அங்க அதை போட்டு டிஸ்ப்லே பண்ண ஒரு மாடல் தேடினேன். எனக்கு யாருமே சாடிஸ்பை ஆகலை. நீ ட்ரை பண்றியா?” என்று கேட்டான்.
அவள் படிப்பறிவு அவளுக்கு அவன் கேட்பதை இரண்டாம் விளக்கமின்றியே தெளிவுற விளக்கியது.
“நான் அஜு கிட்ட கேட்டுட்டு சொல்லவா மாமா?” என்று அவள் வினவ,
அத்தனை நேரம் அவன் இதழில் இருந்த சிரிப்பு எங்கே சென்றதோ?
“நான் எனக்கு மாடலாக உன்னை தான் கேட்குறேன். அவனை இல்லை. உனக்கு இஷ்டமிருந்தா யோசிச்சு சொல்லு. சும்மா அவங்கள கேக்குறேன் இவங்கள கேக்குறேன்னு” என்றுவிட்டு விறுவிறுவென அவன் மேலே சென்றிட, பாவையவள் அவனது திடீர் கோபத்தில் அதிர்ந்து தான் போனாள்.
அவன் மேலே சென்று கதவடைத்துக் கொள்ள, மூத்த மருமகள் மற்றும் பேரனுடன் கோவில் சென்றிருந்த யமுனா உள்ளே வந்தார். மேல் படிகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்த மருமகளிடம் வந்த யமுனா “அஞ்சு..” என்று அவள் தோள் தொட, அதில் லேசாய் அதிர்ந்து திரும்பியவள்
“அ..அத்தை” என்றாள்.
“என்னாச்சுடா?” என்று அவர் வினவ, ஏதோ கூற வந்தவள் பின்பு என்ன நினைத்தாளோ? ஒன்றுமில்லை என்பதாய் தலையசைத்து மேலே ஓட்டமும் நடையுமாய் சென்றாள். அரக்க பறக்க தங்கள் அறைக்குள் நுழைந்தவள் அவனைத் தேட, அவனது வேலை அறை லேசாய் திறந்திருந்தது.
அவன் அங்கிருப்பது புரியவே, வேகமாய் உள்ளே சென்றவள் அவன் மீதே மோதிக் கொள்ள, தடுமாறி விழப்போனவள் இடைபற்றி நிறுத்தினான். விழுந்துவிடுவோமோ என்ற பயத்தில் அவன் சட்டையை இறுக பற்றி கண்களை மூடிக் கொண்டவள் அவன் தொடுகையில் மெல்ல கண்திறக்க, யஷ்வந்தின் அழுத்தமான விழிகள் அவளை உற்று நோக்கின.
வேகமாக ஏறி வந்ததால் அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கவே, நாசிவழி மூச்சிழுப்பதும் போதாது லேசாய் வாய்திறந்து மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டிருந்தாள். தன்னையே பார்த்திருப்பவளைப் பார்த்து தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி அவன் என்னவென்று வினவ,
“மா..மாமா..” என்று தடுமாறினாள்.
அவளை மெல்ல தூக்கி நிறுத்தியவன் தன் கரங்களிலிருந்து அவளுக்கு விடை கொடுக்க,
“மா..மாமா.. சாரி” என்று மூச்சு வாங்க கூறினாள்.
“ஓட்டப்போட்டில ஓடின மாதிரி இப்படி மூச்சு வாங்குது?” என்று அவன் அதே புருவத்தூக்கலுடன் வினவ,
“நி.. நீங்கதான் திடீர்னு கோவமா பேசிட்டீங்களே. அதான் சமாதானம் செய்ய வேகமா வந்தேன்” என்றாள்.
“ஓ.. என்ன பண்ணி சமாதானம் செய்ய போற?” என்று தன் கரங்களை இடுப்பில் குற்றி நின்றவன் அவளை நோக்கி லேசாய் குனிந்து வினவ,
“என்ன பண்ணா உங்க கோவம் போகும்?” என்றாள்.
அதில் மீசையோரம் துடித்த இதழ்களை அடக்கியவன் ஏதோ கூறுவர, அதற்குள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு “சாரி மாமா” என்றாள்.
'அட போடி.. அழுத்து போச்சு.. ஒரு ஃபீலே இல்லை' என்று நகைப்போடு எண்ணிக் கொண்டவன் திரும்பி நடக்க, “எனக்கு ஓகே மாமா” என்றாள்.
புருவம் சுருங்க அவளைத் திரும்பிப் பார்த்தவன் “என்ன ஓகே?” என்க,
“அந்த மாடலிங்கு” என்றாள்.
“அதான் உன்னோட அஜூ கிட்ட கேட்கனும்னு சொன்னியே” என அவன் பற்களைக் கடிக்க,
“இல்ல மாமா.. நா.. நான் எப்பவும் அவன்கிட்ட கேட்டு செய்யுற பழக்கத்துலயே சொல்லிட்டேன். அஜுகிட்ட கேட்டா அவனும் என்னை சொந்தமா முடிவு எடுக்க சொல்லி தான் திட்டுவான்” என்றாள்.
“அவசரம் இல்லை யோசிச்சு சொல்லு. உனக்கு இதுனால எந்த பிரச்சனையும் இல்லைனா ஓகே பண்ணலாம்” என்று அவன் கூற,
இரண்டே நிமிடங்கள் யோசித்தவள் “அதான் நீங்க இருக்கீங்களே மாமா. என்ன பிரச்சினை வரப்போகுது?” என்றாள்.
அவள் புரியாது கூறியபோதும் அந்த வரிகளில் அவள் தன்னை எத்தனை நம்புகின்றாள் என்பதை அவனால் உணர முடிந்தது. “கண்பார்மா?” என்று அவன் கேட்க,
“பிரச்சினைனா எந்த மாதிரி சொல்றீங்க மாமா?” என்று கேட்டாள். அவள் விவரமாய் கேள்வி எழுப்புவது இதுவே முதல் முறை எனலாம்.
'பரவாயில்லையே..’ என்று நினைத்துக் கொண்டவன், “சோஷியல் மீடியால உன் பிக்ஸ் வரும். அடுத்து எதும் மாடலிங்கு உன்னை கேட்டு நிறையா பேர் வர வாய்ப்பு இருக்கு, காலேஜ் போகனும் வரனும் உன்னோட படிப்பை அது பாதிக்குமானு யோசிச்சுக்கோ” என்று கூறினான்.
“நான் சோஷியல் மீடியா யூஸ் பண்ணது இல்லை மாமா. அதுல போட்டோ வந்தா நல்லதில்லையா?” என்று அவள் கேட்க, அவளை ஆழ்ந்து பார்த்தவன் அவளை அழைத்து வந்து அங்குள்ள நீள்விருக்கையில் அமர்த்தி தன் மடிக்கணினியை இயக்கினான்.
இணையம் பற்றி சுருக்கமாய் அவன் கூற, “இதுல நல்லது இருக்கா கேட்டது இருக்கா?” என்றவள் கேள்விக்கு
“ரெண்டுமே இருக்கு. நல்லதை பார்த்தா நமக்கு நல்லது தான் காட்டும். கெட்டதை தேடினா கெட்டது தான் காட்டும்” என்றான்.
“கெட்டதுனு தெரிஞ்சும் யாரு மாமா அதை தேட போறாங்க?” என்று அவள் கேட்க,
“ஏன் மாட்டாங்க? சந்தர்ப்பம் அமைந்தா தான் ஒருவன் உண்மையில் நல்லவனா கெட்டவனானு புரியும் அஞ்சனா” என்றான்.
“அப்றம் நிறையா கம்பெனீஸ்ல இருந்து அங்க ஆள் வருவாங்க. நீ நம்ம யுவனா இன்டஸ்ட்ரீஸ்ல ஒரு பார்டா இருந்தா கண்டிப்பா அவங்களால உன்னை மாடலிங்காக கேட்க முடியாது. ஆனா நீ இப்ப ஒரு காலேஜ் ஸ்டூடென்ட். அதனால நிறையா டிஸ்டர்பென்ஸ் இருக்கும்” என்று யஷ்வந்த் கூற, “பரவாயில்லை மாமா. நான் எக்ஸாம் இருக்கு முடியாது சொல்லிப்பேன்” என்றாள்.
அனைத்தும் தெளிவுற்ற போதும் சமூக வலைதளம் மட்டும் அவளுக்கு குழப்பமாகவே இருந்தது. அது குறித்து வினவி, புரியாமல் பார்த்தவளைப் பார்த்து “தப்பு செய்யாதவங்க இல்லைனு இல்லை. உன் சின்ன வயசுல நடந்த அந்த சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு தான். அவங்க தப்பு செய்யலையா? யாரும் முழு நல்லவங்கனு இங்க கிடையாது அஞ்சனா” என்று அவன் கூற, விழிகள் விரிய அவனைப் பார்த்தாள்.
தன்னைப்போல் அந்த கதறல் ஒலி அவள் காதுகளில் ஒலிக்கத் துவங்க, மெல்லிய நடுக்கம் அவளிடம். அந்த கதறலுக்கு அவள் இன்றளவும் அஞ்சி வருவது அறியாது அவள் அதை மறந்துவிட்டாள் என்றே எண்ணி அவன் கூறிட, அவளோ இன்றளவும் அதன் தாக்கத்தில் பயம் விலகாது அல்லவா இருக்கின்றாள்.
“அஞ்சனா..” என்று அவன் அவள் தோள் தொட,
“அ..அவ ரொம்ப அழுதா மாமா. எ..எனக்கு அது கேக்கும். கத்தி அழுதா” என்று குரல் நடுங்க கூறினாள்.
அவளை தன் தோளோடு அணைத்து பிடித்தவன், “அஞ்சனா.. அது உன் வாழ்க்கைல ஒரு இன்சிடென்ட் தான். அதை ஒரு கெட்ட மெமரியா நினைச்சு விட்டுடு” என்று கூற, அவனை கட்டிக் கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்தவளோ,
“அவ பாவம் மாமா.. ரொ..ரெம்ப அழுதா” என்று கதறினாள்.
அந்த பக்குவமற்ற வயதில் அவள் பார்த்த கேட்ட சம்பவத்தின் பாதிப்பு இன்னும் வடுவாய் அவள் மனதில் இருப்பது அவனுக்கு புரிந்தது. அதில் அவனுக்கு ஆச்சரியமேதுமில்லை. முறைப்படி சொல்லிக் கொடுத்து அவளையும் இயல்பாய் வளர்த்திருந்தால் நிச்சயம் அவள் அவற்றை மறந்து சாதாரண வாழ்க்கை தான் வாழ்ந்திருப்பாள்.
ஆனால் அவளுக்குத்தான் எவ்வித விளக்கமும், ஆலோசனையும் அவள் அன்னை கொடுக்கவே இல்லையே! ஒரு பெருமூச்சுவிட்ட யஷ்வந்த் அவளுக்குத் தட்டிக் கொடுத்து, “அஞ்சு.. சனா.. ப்ளீஸ் ஸ்டாப் க்ரையிங் (அழறத நிறுத்து)” என்று கூற, கண்ணீருடன் அவனைப் பார்த்தாள்.
அந்த பார்வை அவனுள் ஏதோ புரியாத உணர்வுக்கான விதையை வீசியது என்றாலும் மிகையாகுது! “அ..அஞ்சு” என்று அவன் விளிக்க,
“இ..இன்டெர்நெட்னால இப்படி பிரச்சினை எதுவும் வருமா மாமா?” என்று பயம் கலந்த குரலில் கேட்டாள்.
அந்த ஒற்றை கேள்வி அவனை பதில் கூற இயலாது தவிக்க வைத்தது. நிச்சயம் இணையத்தின் ஆட்டத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் வருவது தற்போதைய காலத்தில் சர்வ சாதாரணமான ஒன்று தான். ஆனால் அவளுடைய ஒற்றை புகைப்படம் ஏதும் செய்திடப் போவதில்லையே!
‘வரும் என்று கூறி அவள் அஞ்சி முடியாது என்று கூறினாள்?’ என்று ஒருமனம் வினவ, ‘அப்படி கூறினால் கண்டிப்பாக அவளை விட்டுவிடக் கூடாது. இந்த வாய்ப்பு அவளுக்கு ஒரு அனுபவத்தையும் பகுத்தறிவையும கொடுக்க நல்ல வாய்ப்பாக அமையும்’’ என்று எண்ணிக் கொண்டான்.
பொருமையாய் அவள் கேள்விக்கு அவன் இணையத்தின் இருண்ட பக்கங்களைப் பற்றி கூற, மேலும் மிரண்டு தான் போனாள்.
“மாமா.. நா..நா” என்று அவள் திணற,
“வர்ற. நீ தான் என் பிராடக்டுக்கு மாடலிங் பண்ண வர்ற” என்று அழுத்தமாய் கூறினான்.
தனக்கென்று ஏதும் நிலையாக பேசி பழகியிறாதவளுக்கு அவனை எதிர்த்து பதில் பேச பயமாக இருக்க, “ஏன் மாமா? பயமா இருக்கு” என்றாள்.
“இதுல அவ்வளவு நல்லது சொன்னேன். ஏன் நீ அந்த கெட்டதை மட்டும் யோசிக்குற? உன் ஒருத்தி ஃபோட்டோ ஷேர் ஆகப்போறதால ஒன்னும் ஆயிடாது. ஆயிரம் பேர் நெட்ல ஃபோட்டோ போடுறாங்க அஞ்சனா. கம் டூ தி பிராக்டிகல் வேர்ல்ட். இன்னுமொன்னு புரிஞ்சுக்கோ நீ யுவனா இன்டஸ்ட்ரீஸ் பிராடக்ட் மாடலர் என்பதைத் தாண்டி இந்த யஷ்வந்த் கிருஷ்ணாவோட வைஃப்” என்று அவன் கூற, அவனையே பயத்தோடு பார்த்தாள்.
“நீ தான்னு நான் முடிவு பண்ணிட்டேன். டேட் அனௌன்ஸ் பண்ண பிறகு சொல்றேன். லீவ் சொல்லிக்கலாம் காலேஜ்ல” என்று கூறியவன் வினோத்துக்கு அழைத்து மாடலர் கிடைத்துவிட்டதாகக் கூறிட, அவனை ஆயாசமாக பார்த்தவள் அமைதியாய் தன் மனதை சமாதானம் செய்து கொள்ள முயன்றாள்.
வேலைகள் முடித்து இருவரும் படுக்க, அவனிடமிருந்து தள்ளிப் படுத்திருந்தவள் மெல்லத் திரும்பி, அவனை ஒட்டிப் படுத்துக் கொள்ள, எப்போதும் தூங்கிய பின்பே தன்னிடம் உருண்டு வரும் கோழிக்குஞ்சு இன்று விழிப்போடு நெருங்குவதை நம்பாமல் புன்னகைத்தான்.
அவன் மார்பில் முகம் புதைத்து கை போட்டுக் கொண்டவளிடம் ஒரு மெல்லிய தயக்கம் தென்பட, அவளை தன் பரந்த கரங்களால் அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்தவன் “என்னடி?” என்றான்.
ஏதோ கூற அவள் தொண்டைக்குழி ஏறி இறங்க, அதில் தன்னைப்போல் அவன் குரல் கனிந்தது.
“சனா பேபி” என்று அவன் அழைக்க,
“தூக்கம் வரமாட்டேக்குது மா..மாமா. ப..பயமா இருக்கு. உ.. உங்க பக்கத்துல படுத்துக்குறேனே” என்றவள் தன்னைபோல அவனோடு மேலும் ஒன்ற, லோசாய் சிரித்தவன்,
“தூங்கின பிறகும் நாம என்ன செய்யுறோம்னு தெரிஞ்சுக்குற பவர் உனக்கு இருந்திருந்தா என்னை கைய கால போட்டு எட்டி உதைக்குறதை கொஞ்சம் தெரிஞ்சு வச்சிருப்ப” என்று கூற சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.
இரவு விளக்கின் வெளிச்சத்தில் அருகில் தெரிந்தவன் முகம் கண்டு தயங்கி மீண்டும் அவள் குனிந்து கொள்ள, மீண்டும் சிரித்துக் கொண்டவன், அவளை இறுக அணைத்து மென்மையினும் மென்மையாய் அவள் நுதழில் இதழ் ஒற்றி, “குட் நைட் கோழிக்குஞ்சு” என்று அவள் வேண்டிய பாதுகாப்பான உணர்வை அவளுக்குக் கொடுத்தான்.