Total Views: 22926
அத்தியாயம் 16
மயங்கி சரிந்தவளை கண்டு பதறிய பத்மினியும் சுசிலாவும் ஓடி வந்து தூக்க மற்ற அனைவரும் அவள் விழுந்ததை வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
தர்மன்தான் அருகில் வந்து "என்னம்மா.... என்ன ஆச்சுன்னு பாருங்க...?" என்க.
"சுசிலா... போய் தண்ணி எடுத்துட்டு வா...." என்க.
அவள் வேகமாக ஓடி தண்ணீர் எடுத்துவர மகிழாவின் முகத்தில் பத்மினி அடித்தார்.
கண்களை சுருக்கி மெல்ல விழித்தாள் அவள்.
பத்மினியோ "மகிழா....என்ன பண்ணுது...?" என கேட்க.
"அது அம்மா..." என தயங்கியவள் "ரெண்டு நாளா சாப்டலம்மா அதான்..." என்றாள் அவள்.
அவருக்கு ஒரு மாதிரியாகி விட "தேவா... உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வா... வீட்டுக்கு போகலாம்...." என்க.
அவனோ "அம்மா.. அவ ஒன்னும் என் பொண்டாட்டி இல்ல..." என்க.
"வாய மூடு...உன் கையால தாலி கட்டியிருக்க.. அதுக்கு இந்த ஊரே சாட்சி....,அப்படியே அவ தப்பு பண்ணியிருந்தாலும் உன்ன போராடி கல்யாணம் பண்ணியிருக்கானா... அது உன்மேல இருக்க உண்மையான பாசமா கூட இருக்கலாம் இல்ல... எனக்கு என்னம்மோ அவ உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டுதான் இப்படி ஒரு காரியத்தை பண்ணியிருப்பான்னு நினைக்கிறேன்... அவ நோக்கம் சரிதான்... ஆனா அத நிறைவேத்த அவ பண்ண செயல்தான் தப்புன்னனு தோணுது... என்ன முன்னாடியே சொல்லி இருந்தா ஊருக்குள்ள உன் பேர் கெடாம இருந்து இருக்கும்... ரொம்ப முறுக்கிட்டு திரியாத ஒழுங்கா அவள ஏத்துக்க பாரு... என்க.
எல்லோரும் பத்மினி பேசியதை ஆச்சர்யமாக பார்த்துவிட்டு "நீ என்ன பேசற பத்மா... இந்த பொண்ணு பண்ண தப்பால இன்னைக்கு நாம அத்தனை பேரும் அவமானப்பட்டு இருக்கோம்... அதகூட விடு சுரேன நினைச்சு பார்த்தியா... ஒரு கேள்வி எதுத்து கேட்டானா... கட்டுடான்னு சொன்ன உடனே தாலிய கட்டிட்டு போய்ட்டான்... ஏற்கனவே தாம்தூம்னு ஆடுவான்... இதுல சலங்கைய வேற கட்டி விட்டு இருக்கோம்... போனவன் என்ன பண்ணிட்டு இருக்கானோ... இதோ இந்த சுந்தர கூட விட்டுட்டு போய்ட்டான்..."என்க.
அப்போது அனைவருக்கும் அங்கு ஒருவன் இருப்பதே நினைவுக்கு வர அருணா அவன் அருகில் வந்தவர் "ஏன்டா... உன்னையும் விட்டுட்டே போய்ட்டான் பாரு..." என்க.
"ம்ம்ம்ம்... நீங்க பண்ணி வச்ச வேலைக்கு இதோட ஏதோ அமைதியா போய்ட்டான்னு சந்தோஷப்படுங்க... என்க.
"ஆமா... அப்படியே துரை தன்னோட நெற்றிக்கண்ண தொறந்து...எங்கள எரிச்சிடுவாரு போடா டேய்..." என சக்கரவர்த்தி கூற.
"அப்பா சாதாரணமா சொல்லிட்டீங்க... எவ்ளோ கோபமா போனான் பார்த்திங்களா... இனி என்ன பண்ண போறானோ தெரியில... நீங்க சொன்ன மாதிரி... நெற்றிக்கண்ண தொறந்து இனி ருத்ரதாண்டவம்தான் ஆடப்போறான்னு நினைக்கிறேன்..." என்க.
"சும்மா பயமுறுத்தாதடா... அவன்ட்ட சொல்லி... இனி அருவிதான் உன் வாழ்க்கை ஒழுங்கா அவகூட சேர்ந்து வாழற வழிய பாக்க சொல்லு..." என்க.
"ஏன்... அத நீங்க சொல்றது.... எப்பவும் என்ன மாட்டி விட்டுட்டு... நீங்க தப்பிச்சிக்குங்க... இனி அப்படிலாம் முடியாது..." என்க.
"ஏன் முடியாது...?"என அருணா கேட்க.
"ம்ம்ம்ம்... இவனுங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி செட்டிலாகிட்டானுங்க... நான் எப்போ பன்றது எனக்கும் வயசாகுதுன்னு யாருக்காவது கவலை இருக்கா...?" என கேட்க.
அங்கு இருந்தவர்கள் அவன் பேச்சில் பக்கென சிரித்துவிட்டனர்.
"நீ பேசற வாய்க்கு இந்த ஜென்மத்துல உனக்கு கல்யாணம் நடக்காது..." என்றார் தர்மன்.
"இங்க பாருங்கப்பா எனக்கும் எங்கேயாச்சும் பொறந்து இருப்பா... இனிமேதான் பொறக்க போறாளா... என்ன ஏன் இந்த ஊர்ல கூட பொறந்து இருக்கலாம் இல்ல..." என அவன் கூறவும் சுசிலா தும்மவும் சரியாக இருக்க சத்தம் வந்த திசையில் பார்த்தவனுக்கு அங்கு அமைதியாக நின்றிருந்தவளின் மேல் நிலைத்து நின்றது.
"சரி... சரி... கோபமா போனவன் என்ன பண்ணிட்டு இருக்கானோ... வாங்க போய் பாக்கலாம்... இன்னும் அவனுக்கு வேற வேப்பிலையடிக்கனும்..." என சக்ரவர்த்தி கூற.
"கிளம்புங்க எல்லோரும்..." என காரை நோக்கி சென்றனர்.
மகிழா, அருவி சக்கரவர்த்தி,அருணா ஒரு காரில் ஏறிக்கொள்ள தர்மனும் பத்மினியும் அவரின் காரில் ஏறினர்.
சுந்தர் அவர்களுடன் காரில் ஏறப்போனவனை தடுத்தார் தர்மன்.
"சுந்தர், அவன்கூட வா..."என்க.
அவனும் அவர் கூறுவது புரிந்து சரி என தலையசைத்துவிட்டு வாசுவின் புல்லட்டில் ஏறினான்.
வாசுவின் வண்டி சீறிப்பாய்ந்தது.
அவன் முறுக்கிய முறுக்கில் பயந்த சுந்தர் "டேய்... அப்பா.. கொஞ்சம் மெதுவா போ... நான் இன்னும் இந்த நாட்டுக்கு சேவை செய்யவேண்டியது நிறைய இருக்கு..." என்க.
அவனோ மேலும் வேகமாக வண்டியை ஓட்டினான்.
பத்மினி முன்பே கூறி ஆரத்தியை ரெடி பண்ண சொல்லி இருக்க கார் வரும் சத்தம் கேட்டு எல்லாம் தயார் நிலையில் வைத்திருந்தனர்.
இரண்டு கார்களும் கேட்டினுள் நுழையும் சத்தம் சுரேனுக்கு கேட்டது.
கோபம் இன்னும் பன்மடங்காக சுவற்றில் ஓங்கி குத்தினான் .
அவனுக்கு இந்த திருமணத்தில் சற்றும் விருப்பம் இல்லை அதுவும் அருவியை மனைவியாக அல்ல ஒர் மனுஷியாகக்கூட நினைக்க மாட்டான் ஆனால் இன்று அவள் கழுத்தில் தாலி கட்டியதை நினைத்து இன்னும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"அந்த படிக்காத பட்டிக்காடு... எனக்கு பொண்டாட்டியா... ச்சே... சென்னைல இருக்க பிரபலமான ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்ல இவனும் ஒருத்தன் அப்படி இருக்கும்போது வெறும் ப்ளஸ் டூ முடிச்சவ என் பொண்டாட்டின்னு.. நான் எப்படி மத்தவங்க முன்னாடி அறிமுகப்படுத்துவேன்... அவ என்ன படிச்சிருக்கா.. அவ பேமிலி பேக்ரவுண்ட் பத்திலாம் விசாரிச்சா.. நான் என்னென்னு சொல்லுவேன் காட்..."என பற்களை கடிக்க அந்த வீட்டு வேலைக்காரப் பெண்மணி ஒருவர் வந்து கீழே அழைப்பதாக கூற "இது ஒன்னுதான் குறைச்சல்..." என நினைத்தவன் "போங்க வரேன்..." என்க.
அவரும் சரி என்றுவிட்டு சென்றார்.
அவர் சென்று சிறிதுநேரம் கழித்தே அவன் கீழிறங்கி செல்ல அங்கு வாசு ஒருபக்கம் தலையை திருப்பிக் கொண்டு நிற்க மகிழாவும் அருவியும் அருகருகே நின்றனர்.
ஆனால் மறந்தும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
மற்றவர்கள் அவர்களின் பின்னால் நின்று கொண்டிருந்தனர்.
சுந்தர் அவனை பார்த்து முறைத்துக் கொண்டு இருக்க அதைப்பற்றிய கவலை இல்லாமல்.
நேராக சக்கரவர்த்தியிடம் சென்றவன் "கூப்ட்டீங்களா...?" என கேட்க.
"ஆமா... சாருக்கு அப்படி என்ன அவசரம்...கட்டினவள தனியா விட்டுட்டு வர அளவுக்கு...?" என கேட்க.
"எதுக்கு கூப்ட்டீங்க..." என கேட்டான் அவன் அவர் கூறியதை காதில் வாங்காமல்.
"ம்ம்ம்ம்... போய் உன் பொண்டாட்டி பக்கத்துல நில்லு... இதோட கடைசியா இருக்கட்டும் இப்படி தனியா விட்டுட்டு வரது..." என கூற.
"இப்ப எதுக்கு லெக்சர் அடிச்சிட்டு இருக்கீங்க... அங்க போய் நிக்கனும் அவ்ளாதான... போறேன்...." என்றவன் அருவியின் அருகில் சென்று நின்று கொண்டான் வேண்டா வெறுப்பாக.
அவளும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை அவனும் அங்கு ஒருத்தி இருப்பதையே கவனியாமல் ஆரத்தி எடுத்தவுடன் "எடுத்தாச்சா... போலாமா இப்ப நான்...?" என்றவன் உள்ளே நுழைய போக "இருடா...சாமி கும்பிட்டு போ..." என அருணா அழைக்க அவனும் வாங்க என்றுவிட்டு முன்னால் செல்ல மற்றவர்கள் அவனை தொடர்ந்து சென்றனர்.
உள்ளே இருந்த பூஜையறைக்கு அழைத்து சென்று இருவரையும் விளக்கேத்த சொல்ல பத்மினிதான் "அருவி... உன் புருஷன்தான் மூத்தவன் அதனால நீ முதல்ல விளக்கேத்து..." என்க.
ரொம்ப முக்கியம் என நினைத்தான் சுரேந்தர்.
அருவியும் அவர் கூறியது போல செய்ய விளக்கேத்தி முடித்தவள் மகிழாவை பார்க்காமல் தீப்பெட்டியை
நீட்ட அவளோ அருவியை பார்த்தபடி வாங்கினாள்.
அவளும் விளக்கேத்தி முடிவுக்க அனைவரும் மனமுருக சாமி கும்பிட சுரேன் மட்டும் பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டுக் கொண்டு நிற்க.
அருவியோ "கடவுளே... அந்த சாத்தானுக்கும் எனக்கும் ஏற்கனவே ஆகாது... இதுல அவனையே எனக்கு மாப்பிளையா நீ அனுப்பி வச்சிருக்கியே... உன்ன என்ன பன்றது... அவன் என்ன பாக்கற பார்வையே எனக்கு பயமா இருக்கு... இதுக்கு மேல என்னெல்லாம் பண்ண காத்துருக்கானோ தெரியில... அவன் என்ன பண்ணாலும் அதை எல்லாம் சமாளிச்சு... மாமா ஆசைப்படியே நான் அவன்கூட வாழனும் முருகா... நீதான் எங்கூடவே இருந்து என்னை தைரியபபடுத்தனும்..." என வேண்டி கொண்டாள்.
அங்கு நின்றிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேண்டுதலை கடவுளின் முன் வைக்க யார் வேண்டுதலை நிறைவேற்றுவாரோ யார் அறிவர்.
சாமி கும்பிட்டுவிட்டு அனைவரும் வெளியேற சுரேனும் வாசுவும் அவர்கள் அறையை நோக்கி செல்ல முற்பட "நில்லுங்கடா..."என்ற குரலில் அப்படியே நின்றனர்.
"உங்க ரெண்டு பேர்கிட்டயும் கொஞ்சம் பேசனும் வாங்க வந்து உக்காருங்க..." என்க.
"பரவால்ல சொல்லுங்க..." என்றான் வாசு.
அவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்த சக்கரவர்த்தி "இங்க பாருங்கடா... இதுக்கு முன்னாடி நீங்க எப்படி வேணாலும் இருந்து இருக்கலாம்... ஆனா இனி அப்படி இருக்க முடியாது... உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு... இனிதான் பொறுப்புகள் அதிகம்... பார்த்து கவனமா நடந்துக்குங்க...." என்க.
இருவரும் அமைதியாக நின்றனர்.
"ஆமா... மாமா சொல்றது சரிதான்... இங்க பாருங்க பசங்களா...எங்க எல்லோருக்கும் தெரியும்... உங்க ரெண்டு பேருக்கும் விரும்பி இந்த கல்யாணம் நடக்கலன்னு... ஆனா என இழுத்தார் பத்மினி மற்ற அனைவரும் அவர் என்ன கூறப்போகிறாரோ என ஆவலுடன் பார்த்திருக்க "எங்கள பொறுத்தவரைக்கும் கல்யாணம்ங்கிறது வாழ்க்கைல ஒருமுறைதான் நடக்கும்... உங்களுக்கு நடந்துடுச்சு இனி இத மாத்த முடியாது... கைக்கு கிடைக்காத ஒன்ன நினைச்சு ஏங்கறதவிட கிடைச்சத வச்சு சந்தோஷமா வாழ நினைக்கனும் அதான் நல்லது... உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்... ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க... உடனே எல்லாம் சரியாகிடாது... ஆனா காலம் எல்லாத்தையும் மாத்தும்... யாருக்கு தெரியும் இன்னைக்கு எலியும் பூனையுமா இருக்கற நீங்க நாளைக்கே நகமும் சதையுமா மாறலாம்.... அதனால நான் இவ கூட வாழ மாட்டேன்னு நீங்களோ... இல்ல உங்கக்கூட வாழ முடியாதுன்னு இவங்களோ... எங்கக்கிட்ட வந்து சொல்ற மாதிரி வச்சிக்காதீங்க..."கொஞ்சம் புரிஞ்சு வாழ முயற்சி பண்ணுங்க..." என பத்மினி கூற அவரையே எல்லோரும் ஆவென பார்த்தனர்.
சற்றுநேரத்தில் ஒரு புறம் மட்டும் கைத்தட்டும் ஓசை கேட்க.
சுந்தர்தான் அவரை பார்த்து "வாரே... வா... பத்மினிம்மா என்ன ஒரு ஸ்பீச்... செம்ம போங்க... நீங்க மட்டும் வக்கீலுக்கு படிச்சு இருந்தீங்க... யாருக்கும் டைவர்ஸ் வாங்கி கொடுக்க மாட்டீங்க.." என்க.
"வாய மூடுடா படுவா... இன்னைக்குதான் கல்யாணம் பண்ணிட்டு வந்து இருக்காங்க இதுல டைவர்ஸ் பத்தி பேசிட்டு இருக்க..." என்க.
"ம்ம்ம்ம்... போங்க போய் இப்ப ரெஸ்ட் எடுங்க... ஈவினிங்ல இருந்து வேலை இருக்கும்... நாளைக்கு விருந்துக்கு உண்டான வேலை இருக்கு... தென்... இந்தர், நாளைக்கு இங்க விருந்து முடிச்சிட்டு அடுத்த நாள் மார்னிங் சென்னை கிளம்பனும்... ஹாஸ்பிடல்ல சொல்லி... அதுக்கு தகுந்த மாதிரி உன்னோட ஷெட்யூல ஆல்டர் பண்ணிடு.... அருணா...,என தன் மனைவியை அழைத்தவர் "ஈவினிங்.... ஒரு நாலு மணிபோல இவங்க நாலுபேரையும் டவுனுக்கு அழைச்சிட்டு போய் தேவையானத வாங்கிக்கொடு..." என தன் கார்டை எடுத்து நீட்ட அவர்களை பார்த்தபடி நின்றிருந்தான் சுரேந்திரன்.....