Total Views: 19387
அதுவரை அதிர்ந்து நின்று இருந்த சாந்தி வேகமாக வந்து அவன் கையை பிடித்துக் கொண்டு " என்ன பேசற கார்த்தி" என்றார் கண்ணீருடன்
அவரின் கையை தட்டிவிட்டு இரண்டடி தள்ளி போய் நின்று "ஆமாம் நான் பொறுக்கி தான் அதையும் நீங்க தானே சொன்னீங்க."
"அய்யோ... நான் சொன்ன ஒரு வார்த்தை இப்படி என் பிள்ளைய இவ்வளவு வருஷம் பிரிச்சது போதும் கார்த்தி இனி அந்த வார்த்தை சொல்லாதபா இந்த அம்மாவை மன்னிச்சிடு நான் சொன்னது தப்பு தான் நான் வளர்த்த புள்ள தப்பு பண்ணிட்டானே என்ற கோபத்தில் அப்படி ஒரு வார்த்தை என் வாயில் வந்திடுச்சு."
"ஆமாம் வளர்த்த பிள்ளை தான் அதான் என்கிட்ட ஒரு வார்த்தை கூட என்ன நடந்தது என்று கேட்காம தப்பே பண்ணாத என்னை தண்டிச்சிங்க."
"அதுவே உங்க பிள்ளை பள்ளிக்கூடத்தில் சண்டை போட்டு சட்டை எல்லாம் கிழிந்து வந்த போது கூட என் பையன் மேல் தவறு இருக்காது அந்த பையன் தான் தவறு செய்து இருப்பான் என்று சொன்னீங்க.
"உங்க பையன் மேல் இருந்த நம்பிக்கை வார்த்தைக்கு வார்த்தை என் பையன் என் பையன் என்று சொன்ன உங்களுக்கு ஏன் என் மேல் நம்பிக்கை வரலை."
"அப்ப வாய் வார்த்தைக்கு தான் என்னை பையன் சொன்னீங்க மனசில பையன் என்று நினைக்கவில்லை தானே."
"அய்யோ.. அப்படி இல்லை கார்த்தி உன்னை என்னைக்கும் பிரிச்சு பார்த்தது கிடையாது. உன்னை நான் பெற்ற பிள்ளையா தான் நினைச்சேன் கொஞ்ச நாளா உன்னை பற்றி தப்பா கேள்விப்பட்டுட்டு இருந்தேன். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை கிட்ட எப்படி கேட்கிறது என்று குழம்பிட்டு இருந்தேன்."
" உங்க அப்பாகிட்டேயும் எப்படி சொல்லுறது என்று தவிச்சுட்டு இருந்தேன். அப்பத்தான் திரும்ப உன்னை பற்றி அப்படி ஒரு சம்பவம் நடந்ததை கேள்வி பட்டுதான் என் வாயில் அந்த வார்த்தை என்னையும் அறியாமல் வந்து விட்டது கார்த்தி" என்றார் சாந்தி.
"ஏன் நீங்க மட்டுமா அந்த வார்த்தை சொன்னீங்க இதே நிக்கிறாரே என்னை பெற்றவர் இவரும் தான் என்னை பொறுக்கி என்றார். அதுவும் பொம்பள பொறுக்கி என்று சொன்னார். இவருக்கு தன் பையன் அப்படி செய்வானா என்று ஓரே ஒரு முறைக்கூட தோன்றவில்லை அதைப் பற்றி என்ன நடந்தது என்று விசாரிக்காமல் என்னை அடித்ததும் இல்லாமல் வீட்டை விட்டு துரத்தி விட்டார்" என்றான்.
அதுவரை மகனின் பேச்சை கேட்டு அதிர்ந்து நின்று இருந்தவர் மகன் தன்னை பற்றி கூறியதும் அவன் அருகில் வந்து,
" கார்த்திகேயா அப்படியில்லைபா நான் உன்னை நம்பினதால் தான் அதுவரை உன்னை பற்றி தவறாக வந்த விஷயத்தை உன்னை ஒரு முறை கூட விசாரிக்கவில்லை. என் மகன் அப்படிப்பட்டவன் இல்லை என்று இருந்தேன் ஆனால் கடைசியாக அன்று நடந்ததை கேள்வி பட்டு உன்னை விசாரிக்க தான் நான் வந்தேன் ஆனால் நீ உன் அம்மா, மாமாகிட்ட சண்டை போடுவதை பார்த்ததும் கோபத்தில் உன்னை அடிச்சி அப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டேன்."
"ஆனால் தப்பே பண்ணாத உன்னை தண்டிச்சதை நினைத்து நினைத்து இவ்வளவு வருஷமா வருந்திட்டு இருக்கோம் கார்த்திகேயா." என்றார் கலங்கிய குரலில் வீரராகவன்.
" வருந்தி என்ன பிரியேஜனம் தண்டனை அனுபவித்தது நான் தானே."
" இவ்வளவு வருஷமா உன்னை தேடிட்டு தான் இருக்கோம் ஆனால் நீ எங்க போனாய் என்று ஒரு சின்ன தகவல் கூட கிடைக்கவில்லை கார்த்திகேயா."
" எப்படி கிடைக்கும் நீங்க என்னை ஊருக்குள்ள தான் தேடி இருப்பிங்க ஜெயிலுக்குள்ள தேடி இருக்கமாட்டிங்களே" என்றதும்.
" கார்த்தி"
" கார்த்திகேயா"
" அத்தான்"
" அண்ணா"
என்று அதிர்ச்சியான குரல்கள் தான் கேட்டது.
சாந்தி அவனிடம் வந்து "கார்த்தி கார்த்தி என்னப்பா சொல்லுற ஜெயில்... ஜெயிலில் இருந்தியா?.. "
" இல்ல இல்ல நீ சும்மா தானே சொல்லுற சொல்லு கார்த்தி சும்மா தானே சொல்லுற" என்று கண்களில் நீரும் முகத்தில் ஆற்றாமையோடும்
கேட்டார்.
ஒரு விரத்தியான சிரிப்போடு "ம்ம்ம் நிஜம் எல்லாம் நிஜம் தான் பெத்தவங்களே பொம்பள பொறுக்கி என்று வீட்டைவிட்டு துரத்தின பின்பு நான் எங்கே போவேன் எனக்கு தான் யாரும் இல்லையே கையில் இருந்த காசு எல்லாம் காலியானது என்னை போல அனாதையாக சுற்றிக் கொண்டு இருந்தவங்க கூட சேர்ந்து திருடிட்டு இருந்தேன் அப்ப ஒரு வீட்டில் திருடும் போது மாட்டிக்கிட்டோம் அங்க இருந்து தப்பிக்க தள்ளி விட்ட போது தலையில் அடிபட்டு இறந்து விட்டார். அதை போலீஸ் கண்டு பிடித்து விட்டது எங்களை கைது பண்ணி திருட்டு, கொலை என்று பத்து வருஷம் ஜெயிலில் போட்டாங்க தண்டனை முடிந்து இரண்டு நாளைக்கு முன்னாடி தான் வெளியே வந்தேன். "
" இனியும் அதே ஊரில் இருக்க வேண்டாம் என்று தான் வேறு எங்கு போவது என்று தெரியாமல் இரயில் நிலையத்தில் உட்கார்ந்து இருந்தேன். அப்பத்தான் முரளி என்னை அடையாளம் கண்டு வரமாட்டேன் சொன்ன என்னை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்தான். "
அவன் ஜெயில் என்றபோதே வாயடைத்து அதிர்ந்து நின்றவர்கள் அவன் கூறிய அனைத்தையும் கேட்டவர்கள் சிலையாக நின்றவர்களின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
" இப்ப சொல்லுங்க இந்த கொலைகாரனை உங்க பையன் சொல்லுவிங்களா?... உங்க பிள்ளைகள் என்னை அண்ணன் சொல்லுவாங்களா?... கயல்விழியை சுட்டிக்காட்டி இவதான் என்னை அத்தான் என்று சொல்லுவாளா?..." என்று கேட்டான்.
அதுவரை அதிர்ந்து சிலையாக நின்றவள் அவளை பார்த்து கேட்ட கேள்வியில் உணர்வு வந்தவள் வேகமாக அவன் அருகில் வந்து அவன் கைகளை பற்றிக்கொண்டு
" இல்லை அத்தான் இல்லை நீங்க கண்டிப்பா கொலை எல்லாம் பண்ணியிருக்கமாட்டிங்க. என் அத்தானை பற்றி எனக்கு தெரியும். யாரே செய்து பழி உங்க மேல போட்டு இருப்பாங்க... நீங்க செய்து இருக்கமாட்டிங்க... சொல்லுங்க அத்தான் சொல்லுங்க நீங்க அதெல்லாம் பண்ணவில்லை தானே" என்று அவனை உலுக்கிக்கொண்டியிருந்தாள்.
அவன் சொல்வதை நம்ப முடியாமல் அதிர்ந்து நின்றவர்கள் கயல்விழியின் பேச்சில் உணர்வு வந்து அவன் அருகில் வந்து
" அண்ணா கண்டிப்பா பண்ணியிருக்கமாட்டிங்க" என்று சரவணனும்
" என் பையன் அப்படியெல்லாம் பண்ணமாட்டான்" என்று சாந்தியும்
" கண்டிப்பா அப்படி ஒரு செயல் நீ பண்ணியிருக்கமாட்ட வாய்யில்லா ஜீவனையே அடிச்சான் என்று அந்த வடிவேலை வேலை விட்டு அனுப்பியவன் நீ போய் ஒரு உயிரை கண்டிப்பா எடுத்திருக்கமாட்ட கார்த்திகேயா" என்று வீரராகவன் கூறினார்.
விரத்தியான சிரிப்போடு "அது எல்லாம் பசிக்கொடுமையை அறியாதப்போ நாலுநாள் பட்டினியாக இருக்கும் போது எல்லாம் மறந்து பசி மட்டுமே கண்ணில் தெரியும் அந்த பசி தான் என்னை கொலைகாரனா ஆக்கியது" என்றான் விரக்தியான குரலில்.
" ஏன் கார்த்திகேயா அப்பவே அப்பாக்கு தெரியப்படுத்தி இருந்தா அப்பா வந்து எப்படியாவது காப்பாத்தி இருப்பேன் இல்லையா?.... "
" யாரு நீங்க வந்து காப்பாத்தி இருப்பிங்க ளா?... தப்பே பண்ணாத அப்பவே ஊர்காரங்க சொன்னாங்க என்று என்னை விசாரிக்காமல் அடிச்சு வீட்டைவிட்டு வெளியே தள்ளினவர் நீங்க, அப்படிப்பட்டவர் கொலைகாரன் தெரிஞ்ச நிமிடம் எனக்கு அப்படி ஒரு பிள்ளையே இல்லை என்று சொல்லி இருப்பிங்க."
மகன் பேசப்பேச தான் எவ்வளவு பெரிய தவறு பண்ணி என் பையன் வாழ்க்கையையே சிதைத்து இருக்கோம் என்று வேதனைப்பட்டவர் இதயத்தில் சுருக்கென்று வலி ஏற்பட்டதும் நெஞ்சை பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்துவிட்டார் வீரராகவன்.
" மாமா என்று வேகமாக அருகில் வந்து என்ன மாமா என்ன பண்ணுது" என்று பதட்டத்துடன் கேட்டாள் கயல்விழி.
மனைவி அவரின் அருகில் உட்கார்ந்து "என்னங்க மாமா பண்ணுது வாங்க ஆஸ்பத்திரிக்கு பேகலாம்" என்றார் சாந்தி.
வேண்டாம் என்று தலையாட்டினர் வீரராகவன்.
சரவணன் வேகமாக சென்று தண்ணீர் எடுத்து வந்து அவருக்கு கொடுக்க கயல்விழி அவருக்கு சிறிது சிறிதாக கொடுத்தாள்.
அதுவரை அமைதியாக அனைத்தும் பார்த்துக் கொண்டு இருந்தானே தவிர அவரின் அருகில் செல்லவில்லை கார்த்திகேயன்.
அவர் மெல்ல எழுந்து வந்து "கார்த்திகேயா" என்று அழைக்கும் போதே
"வேண்டாம் நீங்க எதுவும் பேசவேண்டாம் என்னை இப்படியே விட்டுவிடுங்க அந்த வீட்டுக்கு வர எனக்கு விருப்பம் இல்லை."
"கார்த்தி அப்பா என்ன சொல்ல வரார் என்று கேளுப்பா" என்றார் சாந்தி
"இப்ப யார் பேச்சு கேட்கற நிலையில் நான் இல்லை என்னை கொஞ்ச நாளைக்கு இப்படியே விட்டுவிடுங்க. இல்லை என்றால் திரும்ப சொல்லாமல் எங்காவது போய்விடுவேன்."
"அத்தான் நம்ம வீட்டில் வந்து இருங்க யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டோம் வாங்க அத்தான்" என்றாள் கயல்விழி.
" ஏய் ஒருவாட்டி சொன்னா புரியாதா எனக்கு அந்த வீட்டுக்கு வர விருப்பம் இல்லை."
" அப்ப எங்க வீட்டுக்கு வாங்க அத்தான்" என்றாள்.
ஏளனப்புன்னகை ஒன்றை அவளைப்பார்த்து உதிர்க்க அதை கண்டவள்.
" சாரி அத்தான் அதுவும் உங்க வீடுதான் அத்தான் வந்து அங்க இருங்க" என்றாள்.
" ஆமாம் கார்த்திகேயா அங்க உன் தாத்தா ரூம் இருக்கு இல்லையா அதில் தங்கிக்க நாங்க யாரும் உன்னை தொந்தரவு பண்ணமாட்டோம்" என்றார் வீரராகவன்.
"இல்லை நான் என் ரங்கசாமி தாத்தா வீட்டில் தங்கிக்கிறேன் அந்த வீட்டு சாவி மட்டும் கொடுங்க" என்றான்.
மகன் தங்கள் வீட்டில் தங்கவிரும்பாமல் தன் தாய் வழி தாத்தாவின் வீட்டில் தங்குவது அவருக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அவனை இப்போது வற்புறுத்தினால் திரும்ப சொல்லாமல் எங்காவது போய்விட்டால் என்ன செய்வது ஏற்கனவே அவன் சிறை வரை சென்று வந்து இருக்கின்றான் அவன் சொல்வது அவரால் நம்ப முடியவில்லை தான் சின்ன உயிர்களிடமே அவ்வளவு பரிவு காட்டுபவன் ஒர் உயிரை எடுத்து இருக்கமாட்டான் என்று அவரின் உள்மனம் உரைத்தது.
கொஞ்சநாட்கள் அவன் போக்கில் விட்டு தான் பிடிக்கவேண்டும் என்று நினைத்தவர்
"சரி கார்த்திகேயா உன் விருப்பப்படி இருந்துக்கே நாங்க உன்னை தொந்தரவு பண்ணமாட்டோம் உனக்கு எப்ப வரனும் தோனுதே அப்ப வா நம்ப வீட்டுக்கு."
"நான் போய் சாவி எடுத்துட்டு உனக்கு சாப்பாடும் எடுத்து வரேன்" என்றவரை
"வேண்டாம் நீங்க யாரும் என்னை பார்க்க வரவேண்டாம், சாப்பாடு என்று எதுவும் கொடுக்க வேண்டாம் சாவி மட்டும் வேலை செய்கிறவங்க கிட்ட கொடுத்து அனுப்புங்க."
" கார்த்திகேயா" என்றார் கவலை நிறைந்த குரலில்
" நான் சொன்னபடி நடக்கலை என்றால் கண்டிப்பா இந்த ஊரைவிட்டு போகிடுவேன். இதுக்கு மேல நீங்களே முடிவு பண்ணிக்கங்க நான் இங்க இருக்கனுமா?... வேண்டாமா?.." என்று பேச்சை முடித்துக்கொண்டு அந்த அறை விட்டு வெளியேறி தோட்டத்திற்கு சென்று நின்றுவிட்டான்.