Total Views: 14808
இதரம் -06
இவ்வளவு வேகமாக கதவை ஏன் தட்டுகிறார்கள் என்று புரியாமல் திரு கதவைத் திறக்க ஜெகதீஸ்வரி தான் நின்றிருந்தார்.
"என்ன ம்மா?" என்று அவன் கேட்கும் முன்பே பதற்றத்துடன்," ஷாலி பாய்ஷன் சாப்பிட்டாளாம் நம்ம ஹாஸ்பிடல்ல தான் அட்மிட் பண்ணி இருக்காங்க" என்று சொல்ல
சற்று திகைத்தவன்," ஒரு நிமிஷம் வந்திடுறேன்" என்று உள்ளே சென்றவன் வாலெட்டோடு கிளம்ப மல்லி புரியாமல் நின்றாள்.
அவளை ஒரு நொடி பார்த்தவன்," வைஷாலி ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்கா நான் போய்ட்டு வர்றேன்" என்றவன் அவள் பதிலை எதிர்பாராமல் கிளம்பிவிட்டான்.
சற்று நேரத்தில் வீடே வெறிச்சோடியது. மல்லி மட்டுமே வீட்டில் இருக்க வேலையாட்கள் தேவையானதை சமைத்து வைத்துவிட்டு தங்கள் இடத்திற்கு சென்று விட்டனர்.
மருத்துவமனையிலோ ஜெயராஜ், திருவை வைஷாலியைப் பார்க்க அனுமதிக்கவே இல்லை.
"இது வீண் விவாதம் சித்தப்பா. அஸ் எ டாக்டரா நான் பார்க்கக் கூடாதா?" என்று கேட்க
"உன்னால தான் வைஷுக்கு இந்த நிலைமை. நீ உள்ளே போய் அவ வேற மாதிரி ரியாக்ட் பண்ணவா?" என்று கத்தினார் ஜெயராஜ்.
"இல்ல எனக்குப் புரியவே இல்லை. மேரேஜ் முடிஞ்சு கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிடுச்சு. இப்ப ஏன் இந்த மாதிரி பண்ணா வைஷாலி. ஒரு வேளை ஹாஸ்பிடல் விஷயத்தை சொன்னதாலையா?" என்று கேட்டவன்," அதுக்குள்ள நியூஸ் அவளுக்குப் போயாச்சா?" என்றான் நக்கல் தொனியில்.
'இவன் பதறுவான் தன்னால் தான் 'என்று கழிவிரக்கம் கொள்ளுவான் என எல்லோரும் எண்ணியிருக்க, நக்கலாய் பேசவும் ஒரு விதமாகப் பார்த்தனர் அவனை.
"ஸ்டாப் இட் திரு. அந்தப் பொண்ணு சாக கிடக்கிறா, நீ என்ன இப்படி பேசுற. உனக்கு இங்க இருக்கப் பிடிக்கலைன்னா நீ கிளம்பலாம். என் பையனா நீன்னு இருக்கு எனக்கு. இன்னும் உன்னால நாங்க என்னவெல்லாம் படணுமோ?!" என்று ஜெகதீஸ்வரி முறைப்பாய் திட்ட, அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை அவன்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மருத்துவர் வெளியே வந்தார்.
"மேடம் இப்போ ஓகே தான். உடனே பார்த்து அட்மிட் பண்ணதால காப்பாத்திட்டோம். இல்லாட்டி..." என கூற
"என்ன டைப் பாய்ஷன்?" என்று வினவினான் திரு.
"திரு!" என்று ஜெகா அதட்ட
"மாம் டீடெய்ல் கூட கேட்க கூடாதா?" என்று கேட்கவும்
"சார், ரேட்டுக்கு வைக்கிற பாய்ஷன்" என்று மருத்துவர் சொல்லவுமே அவரை ஆழ்ந்து பார்த்தவன்," வெல் உங்க நேம்?" என்று கேட்க
'இவன் என்னடா இப்படி செய்கிறான் ?'என்று ஆனது அனைவருக்கும்.
"ஓகே அவங்க ரிப்போர்ட் என் டேபிளுக்கு அனுப்பிடுங்க. ஐம் டாக்டர் திருமாறன். இந்த ஹாஸ்பிடலோட எம்டி இந்த நிமிடத்தில் இருந்து."என்று அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு வைஷாலி இருந்த அறைக்குள் சென்றான்.
வைஷாலி உறங்கிக் கொண்டிருக்க, அருகிலிருந்த செவிலியரிடம் ரிப்போர்ட்டை வாங்கிப் படித்தவன்
"ம்ம்ம், ஹெவி டோஸ் தான்." என்றபடி," நம்ம ஹேஸ்ட்ரோ ஸ்பெஷலிஸ்ட் வரவழைச்சு இன்டைஸ்டைன் செக் பண்ணிடுங்க, மே பீ பர்ன் ஆகி இருக்கலாம். எந்த டெஸ்ட் எடுக்கிறதா இருந்தாலும் என் நாலேட்ஜ் இல்லாம எடுக்கக் கூடாது" என்று அமர்த்தலாய் கூறிவிட்டுச் செல்ல வெளியே சாந்தகுமார் தன் மகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதாக குதித்தார்.
"அதை நீங்க இங்க அட்மிட் பண்ணறதுக்கு முன்னாடி திங்க் பண்ணி இருக்கணும். பாதியில் அழைச்சுட்டுப் போய் பேஷண்டுக்கு ஏதாவது ஒன்னு ஆகிட்டா யார் பொறுப்பு?" என்று அமர்த்தலாய் கேட்க
"உங்களை கைகாட்ட மாட்டோம் சார். இப்ப எங்க பொண்ணை டிஸ்சார்ஜ் பண்ணுங்க" என்றார் அவரும்.
நெற்றியைக் கீறிக் கொண்டவன் திரும்பி ஜீவரெத்தினத்தையும், இளமாறனையும் பார்க்க," சாந்தகுமார் ஏன் தேவை இல்லாத ரிஸ்க் எடுக்கறீங்க. வைஷுவை ஸ்பெஷலிஸ்ட் வச்சு கவனிப்போம்" என்றார் இளமாறன் ஆறுதலாக.
"வேண்டாம் சார். யாரால என் பெண்ணுக்கு இந்த நிலைமையோ அவங்க இடத்தில் என் பொண்ணை இருக்க வைக்க விருப்பம் இல்லை"என்று மீண்டும் மீண்டும் அதையே சொல்ல
"வெல் ஓகே மிஸ்டர் சாந்தகுமார் டிஸ்சார்ஜ் பண்ணிக்கங்க" என்றதும் அவருக்கே ஒரு நிமிடம் அதிர்ச்சி தான்.
"திரு டோன்ட் டாக் லைக் திஸ்" என்ற ஜெகா," அண்ணா வைஷுவுக்கு நான் பொறுப்பு. அவளை பழையபடி பார்க்காமல் நான் ஓயமாட்டேன். வைஷ்ணவி சொல்லு" என்று ஓரகத்தியை துணைக்கழைத்தார் ஜெகா.
ஜெயராஜோ, "மச்சான், அதான் அண்ணி சொல்றாங்களே நான் இருக்கேன் கூட தங்கச்சிமா சொல்லும்மா" என சாந்தகுமார் மனைவியையும் தனக்கு ஆதரவாக பேச அழைக்க அவரும் அதையே ஆமோதிக்க, வைஷாலிக்கு அங்கேயே மருத்துவம் பார்க்க தீர்மானிக்கப்பட்டது.
திரு அங்கிருந்து உடனேயே கிளம்பிவிட்டான்.
வீட்டிற்கு வந்ததும்," அவங்க எப்படி இருக்காங்க?" என்று மல்லி கேட்க
"அதைத் தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போற?" என்று சுள்ளென விழுந்தான் அவளிடம்.
அதற்கு மேல் அவள் பேசவில்லை.
ஒரு வாரம் ஆகியது வைஷாலியை மருத்துவ மனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வர. ஆம் அழைத்து வர தான். ஜெகதீஸ்வரி பிடிவாதமாக வைஷாலியை ஜெஆர்எம் பேலஸிற்கு தான் அழைத்து வந்திருந்தார். 'அவள் இனி அங்கு தான் தங்குவாள்' என்று எல்லோரிடமும் சொல்லிவிட, திரு அதனைக் கண்டு கொள்ளவே இல்லை.
அவன் எதிர்ப்பான் என்று மற்றவர்கள் எதிர்பார்க்க, அவனோ,' யார் வந்தால் எனக்கு என்ன?' என்பது போல இருந்தான்.
ஆனால் வைஷாலியின் வருகையில் மல்லிக்குத் தான் பதற்றம் கூடியது.
"ஃபீல் ஃப்ரீ வைஷு. இது உன் வீடு" என்ற ஜெகதீஸ்வரியை சட்டென நிமிர்ந்து முறைத்தார் ஜீவரெத்தினம்.
"செஞ்சு, வைஷுக்கு சூப் எடுத்துட்டு வா" அதிகாரம் தூள் பறந்தது ஜெகாவிடமும் , வைஷ்ணவியிடமும்.
அப்போது தான் உணவருந்த வந்தமர்ந்தான் திருமாறன்.
வைஷாலியின் பார்வை அவனை வட்டமிட,மற்றவர்கள் உணவில் கவனம் வைத்தனர்.
"தேவா!" என்று திடீரென திரு சத்தமாய் அழைக்கவும் என்னவோ என்று பதற்றத்துடன் ஓடிவந்தாள் மல்லி.
'சார்' என்று வந்த வார்த்தையை விழுங்கிவிட்டு,"என்னங்க ?"என மொழிந்திருக்க திருவின் முகத்தில் சட்டென ஒரு மின்னல்.
"சாப்பிடுற நேரத்தில் கிச்சன்ல என்ன பண்ற? உட்கார்." என்று அமர்த்தலாய் மொழிய திருதிருத்தாள் மல்லி.
அவள் அமராதிருக்கவும்," உன்னை உட்கார சொன்னேன் தேவா!" என்று சொல்ல அவனருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
வைஷாலி பார்வையை தாழ்த்திக் கொள்ள, ஜெகா முகத்தை திருப்பிக் கொண்டார்.
ஜீவரெத்தினத்தம்மாவோ," இனிமே திருவோடவே சேர்ந்து சாப்பிட்டுடனும் மல்லி. பசிக்குது பசிக்கலை நேரத்திற்கு சரியா சாப்பிட்டு இருக்கணும். உனக்காக இல்லாட்டியும் குழந்தைக்காகவாவது சாப்பிடணும்."என்ற அவரது கூற்றில் அழுத்தம் கூடியிருந்தது போல உணர்ந்தனர் ஏனையோர்.
"சரிங்க பாட்டி !"என்றவள் திருவோடு எழுந்து கொள்ள வைஷாலி அவர்களை ஓரக்கண்ணால் பார்த்தபடி உணவருந்தினாள்.
"ஹ்ஹான் வைஷாலி !"என்று திரு அழைத்ததும் சட்டென திடுக்கிட்டு அவனைப் பார்க்க, மல்லியும் அதிர்ந்து பார்த்தாள்.
"ஆர் யூ ஓகே நவ்? "என்று கேட்டவனை எந்த ரகத்தில் சேர்க்கவென்றேத் தெரியவில்லை அனைவருக்கும்.
"எஸ் ஐம் ஓகே"என்று சிறு குரலில் சோகமாய் பதிலளித்தாள் அவள்.
"தென் ஓகே. ரெடியா இருங்க, கொஞ்சம் வெளியே போகணும்" என்றிருந்தான் அனைவருக்கும் மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக.
.....தொடரும்.