Total Views: 2168
அத்தியாயம் 28
இந்திரன் வெகு வேகமாக தன் இடத்தினை விட்டு புறப்பட, அதற்குள் உள்ளே வந்த அக்கினி "தமையனே தாங்கள் இன்று வெளியே செல்ல வேண்டாம்" என்றான் பதட்டத்தோடு.
"எதற்கு அக்கினி வெளியே செல்லக் கூடாது. ஏன் பதட்டமாக வேறு இருக்கின்றாய்? ஏதேனும் பிரச்சனையா?"
"சனிதேவன் தங்களை பிடிக்க காத்திருக்கின்றான் தமையனே. தாங்கள் எங்கும் செல்ல வேண்டாம்"
"அவனுக்கு அஞ்சுபவன் நானில்லை"
"இந்த ஆணவம் வேண்டாம் தமையனே. சனிதேவனின் மகிமை தெரியாது பேசுவது தவறு"
"எல்லாம் எமக்குத் தெரியும் அக்கினி. நீயுன் வேலையைப் பார்" என அதட்டி விட்டு இந்திரன் மகிழ்ச்சியோடு புறப்பட்டான். அஞ்சனாவின் நினைவு அவன் சித்தத்தினை கலங்கடித்திருந்தது. தலையில் எதுவோ மோதிவிட தன் ஐராவதத்தினை தடுத்து நிறுத்தி மேலே பார்க்க சனியின் வாகனம் தான். கோபத்தில் சரியென்று பல்லைக் கடிக்க தனக்கு முன்னே அந்த காகத்தில் அமர்ந்தவாறு காட்சி தந்தான் சனீஸ்வரன்.
"என்ன சனி? ஏது இவ்வளவு தூரம்?"
"சனியின் வருகைக்கு கால நேரம் எல்லாம் கிடையாது இந்திரா"
"வழிவிட்டு விலகி நில் சனி. நான் செல்ல வேண்டும். உன்னுடன் உரையாட எனக்கின்று நேரமில்லை"
"நானும் உரையாட வரவில்லை இந்திரா" என சொன்னவன் இந்திரன் மீது பார்வையை அழுத்தமாக செலுத்த அவன் மீது கரிய நிழல் விழுந்தது.
"இது தவறு சனி" சொன்னவன் கைகால்கள் எல்லாம் மரத்துப் போக அப்படியே கரிய நிறம் பாய்ந்து விழுந்து விட்டான். தகதகவென மின்னும் தங்கமாய் இருந்தவன் இப்போது நெருப்புத் தீண்டிய மரமென மாறிப் போனான். அவனால் நகர கூட முடியவில்லை.
"சனி வேண்டாம்"
"எது தவறு இந்திரா.. ஒரு பெண்ணின் மனம் என்னவென்று அறிந்தும் அவளின் காதலுக்கு இடையூறாக சென்று நின்றாயே அது தவறு. இயமன் தவறு செய்தவனே ஆனாலும் அவனுக்கே உரிய அவிர்பாகத்தினை தடுத்துனாயே அது தவறு. ஈசனின் தண்டனையில் இருந்து தப்பித்துவிட்டதாய் நினைத்து மீண்டும் இயமனை நோகடிக்கிறாயே அது தவறு. இதெல்லாவற்றையும் விட இன்னமும் அஞ்சனாவின் பேரில் கொண்டுள்ளாயே மோகம் அது பெரிய தவறு.. இன்றிலிருந்து முழுதாய் ஏழரை நாட்கள் உனக்கிந்த தண்டனை உண்டு இந்திரா. இதிலிருந்து உன்னைக் காக்க எவரும் வரப்போவதில்லை.. ஏழரை நாட்கள் கழித்து நீ மீண்டு வருகையில் அனைத்துக் கணக்கும் நேர் செய்யப்பட்டிருக்கும்" சொன்னவன் சென்றுவிட அஞ்சனாவினை அடைய முடியாத ஆத்திரத்தில் தன்னை நினைத்த
---------------------
தட்டில் இருந்த உணவினை அவள் வாங்க மறுத்து அவளிருக்க அவள் முன் நீட்டியபடியே அவளையேப் பார்த்திருந்தான் அவன்.
"வேண்டாம்னு சொல்லியும் இப்படியே நீட்டிட்டு இருக்கயே"
"நீ சாப்பிடாமல் நான் இங்க இருந்து நகரப் போறது இல்லை"
"எனக்கு வேண்டாம்"
"குழந்தைக்காக சாப்பிடு"
"என் குழந்தைக்கும் வேண்டாம். உன்னை மாதிரி கேடுகெட்டவன் கொடுக்குறதை சாப்பிடணும்னு என் குழந்தைக்கு என்ன தலையெழுத்தா?"
"ஏய் சாப்பிடுன்னு சொன்னா சாப்பிடுற வேலையை மட்டும் பார்க்கணும். தேவையில்லாததை எல்லாம் பேசாத"
"ஒன்னும் தேவையில்லை கிளம்பு" என பிடிவாதமாக அவள் மறுக்க, "இப்போ நீ சாப்பிடலைன்னா எப்படி சாப்பிட வைக்கணும்னு எனக்குத் தெரியும்" என்றான் அந்தகன்.
"நீ என்னைத் தொட்டா உன் மண்டையை உடைப்பேன்னும் உனக்குத் தெரியும். என்கிட்ட விளையாட வேண்டாம்"
"ஏன்டி இப்படி பிடிவாதம் பிடிக்குற. பசிக்கும்தானே உனக்கு.. சாப்பிடு"
"நீதான் பிடிவாதமா என்னை இங்க உக்கார வச்சுருக்க. நான் எங்க வீட்டுக்குப் போகணும். திருவைப் பார்க்கணும். என்னை அனுப்பி வச்சுடு"
"அவனை பத்திப் பேசாத"
"திரு இல்லாமல் நான் இருந்ததே இல்லை. அவன்கிட்ட என்னை விட்டுடு"
"விடமாட்டேன் டி.. விடவே மாட்டேன்"
"நீயென்ன மனுஷனா இல்லை மிருகமா"
"நான் எமன்"
வெறுத்து பார்த்த அவள் விழிகளை சாதாரணமாக எதிர்கொண்டவன் தட்டினை வாங்கிக் கொள்ளச் சொன்னான்.
கண்கள் கலங்கியது அவளுக்கு. அவளது கண்ணீர் கண்டும் இளகாமல் அவனிருக்க தட்டினை வாங்கியவள் அள்ளி அள்ளி உண்ணத் தொடங்கினாள். அவன் சமைத்த உணவு. அவளுக்காக பார்த்து பார்த்து செய்தது. அதில் அவன் காதல் அதீத அளவில் கலந்திருந்தது. அது அவள் இதழ்பட்டு அவளுக்குள் செல்ல செல்ல இயமன் சிலிர்த்து போனான்.
வாழ்ந்த வாழ்வெல்லாம் கண்முன் வந்து அவனது உணர்வுகளை வெளிக் கொண்டுவர முடிந்த அளவிற்கு அவன் அவனையே கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தான். அந்த வினோத சுவையில் அவளது கலக்கம் கூட இரண்டாம் பட்சமாக போனது.
"நல்லா சமைக்கிற நீ.. இப்படின்னு தெரிஞ்சுருந்தா நான் உன்கிட்ட விவாதம் பண்ணாமலே வாங்கி சாப்பிட்டுருப்பேன்" பாராட்டும் கிடைக்க இயமனுக்கு தலைகால் புரியவில்லை.
"அஞ்சனா உனக்கு ருசி பிடிச்சுருக்கா"
"ம்ம் நல்லா இருக்கு" அவள் திருப்தியோடு தட்டினை அவன் புறம் நீட்ட அதை வாங்கியவன் மகிழ்வோடு உள்ளே நுழைந்தான்.
----------------------
அஞ்சனா எங்குதேடியும் கிடைக்கவில்லை என்றானதும் அவன் சோர்ந்து போய் வீடு வந்தான். சிவகாமி லட்சுமி இருவரது முகங்களும் அழுகையால் சற்று அதிகமாகவே வீங்கியிருந்தது.
"திரு என்னப்பா ஆச்சு. அஞ்சனா பத்தி ஏதாவது தெரிஞ்சதா?"
"இல்லை அத்தை. எங்க போனா என்னென்னு எதுவுமே தெரியல அத்தை"
"இதென்னடா இப்படிச் சொல்லுற. அவளுக்கு நம்மள விட்டா யார் இருக்கா. அவ எங்கதான் போயிருப்பா" லட்சுமி கேட்க, "எனக்குத் தெரியலை அம்மா" என்று சொன்னவன் திடுமென "அந்தகன்" என்றிட, "என்ன சொல்லுற?" இருவரும் அதிர்ந்து போய் பார்த்தார்கள்.
"அவனோட வேலையா இருக்கும்னு நினைக்குறேன்"
"அவனைத்தான் இவ மறந்துட்டாளே திரு"
"அவன் இன்னும் மறக்கலையே அத்தை. கோவிலுக்குப் போனப்போ கூட பயந்துட்டே ஒருத்தன் வந்து பேசுனதா சொன்னா.. ஆனால் நான்தான் அதை பெருசா எடுத்துக்கல.."
"என்னடா இது. அவ நம்மகிட்ட வந்ததை நினைச்சு இப்போத்தான் கொஞ்சம் எல்லாரும் சந்தோஷமா இருந்தோம். அது பிடிக்கலையா கடவுளுக்கு. மறுபடியும் இவன் எதுக்கு என் பொண்ணு வாழ்க்கையில குறுக்க வர்றான். திரு எப்படியாவது அவளைக் கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்துடு டா" எனவும் அவனும் "கண்டிப்பா அத்தை" என்றவாறு வெளியேறியிருந்தான்.
--------------------------------
"நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அந்தகன்" அதுவரை காதலோடு அவளை இரசித்துக் கொண்டிருந்தவன் சட்டென்று பார்வையை மாற்றி தலையை திருப்பிக் கொண்டான்.
"என்ன? சொல்லு" அவன் தடுமாறுவது அவளுக்கு வித்தியாசமாகப்பட்டது. அவளும் தான் அவன் பார்வையை கவனித்துவிட்டாளே. அதானல் தானே கேள்வி கேட்டதே.
"பேசணும்னு சொன்ன?" அவள் எதுவும் பேசாமல் இருக்க இவனே ஆரம்பித்து வைத்தான்.
"அதுக்கு நீ என் முகத்தைப் பார்க்கணும். நீதான் அந்தப்பக்கமாவே பார்த்துட்டு இருக்கயே அதான் எதுக்குப் பேசணும்னு இருந்துட்டேன்"
"ப்ச் சொல்லு அஞ்சனா"
"என்னை உனக்குப் பிடிக்குமா?"
"ம்ம் ரொம்ப"
"எதனால அந்தகன்"
"என்கிட்ட காரணம் எதுவும் இல்லையே அஞ்சனா"
"எனக்கு வேண்டுமே அந்தகன்"
"காரணம் சொன்னா உன்னால என்கூட இருக்க முடியுமா?"
"திருகூட நான் வாழ்ந்த வாழ்க்கை உனக்கு உறுத்தாதா அந்தகன்"
"கேள்வி கேட்டால் பதில் சொல்லணும் அஞ்சனா. மறுபடியும் கேள்வி கேட்கக் கூடாது"
"நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னால் நீ கேட்ட கேள்விக்குப் பதில் கிடைக்கும்"
"அதுல உறுத்துற அளவுக்கு ஒன்னுமே இல்லை அஞ்சனா. எனக்குத் தேவை அஞ்சனா. அவ மட்டும்தான்"
"அப்போ என் வயித்துல இருக்குறத என்ன பண்ணுறது?"
"அஞ்சனா அப்படின்னா எல்லாம் சேர்ந்தது தான்"
"ஓஹோ.. சரி என்னை நீ இங்க இருந்து அனுப்ப மாட்டதானே"
"ம்ஹ்ம் மாட்டேன்"
"இப்போ வந்த நீ ஏன் திருவை கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடியே வரலை"
"திருவுக்கு முன்னாடியே உன் வாழ்க்கையில வந்தவன் நானுன்னு சொன்னா நீ நம்புவயா? அஞ்சனா"
"ம்ஹூம் மாட்டேன்"
"நீ நம்பலைன்னாலும் அதுதான் உண்மை அஞ்சனா. நீ என் மனைவி"
அவளுக்கு கோபம் வரவில்லை மாறாக சிரிப்பு வந்தது.
"அந்தகா சிரிக்க வைக்காத. இவ்வளவு பெரிய வயித்தோட என்னால சிரிக்க முடியாது"
"நான் சொல்லுறது உனக்கு சிரிப்பு வரத்தான் செய்யும் அஞ்சனா. நான் மறுக்கல. அப்படியாவது நீ சந்தோஷமா இரு போதும்"
"என் சந்தோஷம் திருகிட்டதான் இருக்குன்னு நானும் இங்க வந்ததுல இருந்து சொல்லுறேன் உனக்கு அது கேக்கவே இல்லை"
"அவன்கிட்ட போறதை பத்தி பேசவே வேண்டாம் அஞ்சனா. உன்னால் இனி எப்பவும் அவன்கிட்ட போகவே முடியாது"
"ம்ம் அடர்ந்த காடு.. சுத்திலும் வனவிலங்குள் நிறைய இருக்குற மாதிரிதான் தட்டுப்படுது. இங்க இருந்து போறது ரொம்பவே கஷ்டமான காரியம் தான். அதே மாதிரி திரு என்னைத் தேடி வர்றதும் முடியாத விஷயம் தான்" சொன்னவள் அமைதியாக அமர்ந்துக் கொண்டாள்.
படபடவென்று அவள் பேசிக் கொண்டே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ண வைத்திருந்தது அவளது தற்போதைய அமைதி. அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று கூட அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனுக்குத் தெரியும் சரியெது தவறெது என்று. தற்போதைக்கு அவன் நினைத்தது இந்திரனிடம் இருந்து இவளைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே. ஆனாலும் காதல் கொண்ட மனம் அவளது காதலையும் தாபம் கொண்ட தேகம் அவளையும் நாடுவதை அவனால் தடுக்க முடியவில்லை. அதுவும் இவ்வளவு நெருக்கத்தில் சுத்தமாக முடியவில்லை.
அங்கிருந்து வெளியேறி விடு இயமா என்று மனம் கூக்குரலிட, அதை செயலாற்றும் பொருட்டு அவன் எழுந்து வெளியே செல்ல, "ஒருநிமிசம் எமா" என்றாள் இவள். 'எமா' எப்போதாவது அஞ்சனாவின் வாயில் இருந்து வரும் விளிப்பு. அதற்கு கட்டுப்பட்டு கைகட்டி அவள் புறம் திரும்பினான்.
"என்னை இங்க இருந்து அனுப்ப மாட்ட அப்படித்தானே"
"இதுக்கு பதில் ஏற்கனவே சொன்னமாதிரி ஞாபகம் இருக்கு அஞ்சனா. வேணும்னா மறுபடியும் சொல்லுறேன் அனுப்ப மாட்டேன்"
"திருகிட்ட மறுபடியும் என்னால போக முடியது சரியா"
"ம்ம்"
"இந்த குழந்தை, என்னோட வாழ்க்கை உனக்கு பிரச்சனையில்லைல"
"இல்லை அஞ்சனா"
"அப்போ சரி.. நான் உன் கூடவே இருக்கேன்"
"கூடவே இருக்கேன்னா எனக்குப் புரியல" அவளது பதிலில் அவனது மனதால் முழுமையாக சந்தோஷம் கொள்ள முடியவில்லை.
"அவனை மறந்துட்டு உன்கூடவே இருக்கேன்னு சொன்னேன். இதுக்கு மேலயும் சொல்லலாம். வேண்டாம் உனக்கே புரியும்"
"நீ சொல்லுறது..?" ஐயத்துடன் வினவ, "உண்மைதான். திருவோட வாழ்ந்து வயித்துல குழந்தையோட இருக்குற என்கூட வாழ்றதுக்கு உனக்கே எந்தவித உறுத்தலும் இல்லாத போது எனக்கு உன் கூட வாழ்றது ஒன்னும் பிரச்சனை இல்லை" அஞ்சனா பேசியதும் அவள் முடிவு கண்டு இயமனுக்கு விழிகள் இரண்டும் விரிந்தது. அவள் பொருள் உணர்ந்து தான் பேசுகிறாளா என்ற சந்தேகம் வலுத்தது. அதன் விளைவு அவனது பார்வையிலும் தெரிய,
அதைக் கண்ணுற்ற அஞ்சனா.. "என்ன எமா ஒரு மார்க்கமாக பார்க்குற. நீ சொல்லுறப்போ நல்லா இருந்த விஷயம் நான் சொல்லும் போது என்னை கேவலமானவளா பார்க்க வைக்குது அப்படித்தானே" என்னும் போதே அவளது கரம் பிடித்திழுத்து பேசின அவளது வாயினை தன் கரம் வைத்து மூடியிருந்தான்.
காதலாசை யாரை விட்டது..!