இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -125 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 14-09-2024

Total Views: 1493

அவள் எதுவும் பேசாமல் இருக்க.

உன்னைய ஜாமீன்ல எடுத்துட்டுப் போலாம்ன்னு தான் வந்தோம் கவலைப்படாம இரு என்றவள் நந்தனிடம் சென்றாள்.

"விஜய்".

-------

"விஜய் ப்ளீஸ் என்னையப் பாருங்க. அவளை வெளியே விட்டுடுங்க விஜய். நான் கேட்டு இது வரைக்கும் நீங்க மறுத்ததுன்னு எதுவுமில்லைல இதை மட்டும் ஏன் மறுக்கறீங்க விஜய்".

"மத்ததும் இதுவும் ஒன்னில்ல. அவ உன்னைய கொல்ல பார்த்துருக்கா என்னைய கொல்லப் பார்த்துருந்தாக் கூட இந்த அளவுக்கு பண்ணிருக்க மாட்டேன் அவ உன்மேல கையை வெச்சிட்டா" என இப்போதும் கர்ஜனையோடு தான் வந்தது அவன் குரல்.

அதில் சுற்றி இருப்பவர்கள் மிரள. நிலா மட்டும் அப்படியே நின்றாள்.

"என்னடி.?,

"கவி வெளியே வரணும்."

"முடியாதுடி".

"அப்போ நான் வேண்டாமா?!

"அவ வெளியே வரதுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்?" என்றவனின் கண்கள் இடுங்கியது.

"இவ உள்ள இருந்தா யுகி எப்படி சந்தோசமா இருப்பான்?, யுகி சந்தோசமா இல்லாம என்னாலையும் உங்கக் கூட சந்தோசமா இருக்க முடியாது விஜய், ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க".

அவள் தெரிந்து பேசினாளோ, தெரியாமல் பேசினாளோ ஆனால் அவள் பேசியது நந்தனைக் காயப்படுத்தியது.

"என்ன பேசறேன்னு யோசிச்சி தான் பேசறியா?"

"எனக்கு யுகி சந்தோஷமா இருக்கனும்."

"இதைப் பண்ணுனா அவன் சந்தோசமா இருப்பானா?"

"அப்படி இல்ல. கவியை ஆறுமாசம் ஒரு வருஷம் உள்ள வெச்சிட்டா அவ வெளியே வந்து அவன் மன்னிச்சி ரெண்டுபேரும் சேர்ந்து வாழறதுக்குள்ள நமக்கு வயசாகிடும், என்ன தான் கவியை நீங்க உள்ளே வெச்சி தண்டனைக் கொடுக்க அவன் சம்மதம் சொன்னாலும் அவன் முகத்துல சிரிப்பு இருக்காது விஜய். இதெல்லாம் அவனுக்காக மட்டும் தான் ப்ளீஸ் விட்டுருங்களேன்" என கெஞ்ச..

"உனக்கு எப்போமே அவன் சந்தோசம் தான் முக்கியம்" என உள்ளர்த்ததுடன் கேக்க.

நிலா இருந்த நிலையில் நந்தன் சொன்னதை அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. "ஆமா" என்றாள்.

"சரி" என்றவன் "ஜாமீன்ல விட்டுடுங்க" என்று விட்டு நிலாவைப் பார்க்காமல் திரும்பி நின்றுக்கொண்டான்.

அவன் பாராமுகம் மனதை வேதனைப்படுத்தினாலும்.வேறு வழியில்லையே.

கவி ஜாமீனில் வெளியே விடப்பட்டாள். நிலாவைத் தவிர வேற யாராலும் கவியை வெளியேக் கொண்டு வந்திருக்க முடியாது. இதை அனைவருமே ஒத்துக்கொள்வார்கள்.

மொத்தக் குடும்பமும் வெளியே போக. செல்வராணி நிலாவின் கையைப் பிடித்து நன்றிக் கூறினார்.

நந்தன் நிலாவைப் பார்க்கவே இல்லை , கோவமாக அங்கிருந்து சென்றவனை எப்படி சமாதானம் செய்வது? என நிலா முழிக்க.

"இது தேவையில்லாத வேலை நிலா.பாம்புன்னு தெரிஞ்சும் பாலை வார்த்தினா அது உன்னைய கொஞ்சாது கொத்த தான் செய்யும், ஏற்கனவே கொத்துன பாம்பு தானே" . என அனைவரின் காதுப் பட சத்தமாகவே சொன்னான் சங்கரப்பாண்டியன்.

மணியும், மார்த்தியும் கூட அதையே தான் சொன்னார்கள்.

"என்ன நிலா பண்ற?. அவ ரெண்டு நாளைக்கு வெளிய வராம இருந்திருந்தா திருந்திப்ப யாரு உன்னைய தேவையில்லாத வேலை பார்க்க சொன்னா?, தப்பு செஞ்சவீங்கள மன்னிக்கலாம் அதுக்காக சாகடிக்க துணிஞ்சவீங்கள மன்னிக்கக் கூடாது. அது இன்னும் ஆபத்துல தான் போய் முடியும்" என்றனர்.

யார் என்ன சொன்னாலும் அவளுக்கு யுகியைத் தவிர யாரும் பெரிதாக தெரியவில்லை. அவன் தன்னை காதலித்திருக்கிறான் என்பதையும் தாங்க முடியவில்லை. அவன் வாழ்வு இப்படி சீர்குழைந்து இருக்கும் போது தான் மட்டும் நந்தனுடன் சந்தோசமாக இருப்பதா? என்று வேதனை வேறு உண்டானது.

உண்மையான அன்பு அப்படி தானே யோசிக்கும். 

எல்லோரும் அவரவர் பாட்டுக்கு கிளம்பி விட, நிலா இப்போது எங்கு செல்வது? என்று தெரியாமல் நின்றாள்.

அவள் அருகில் கார் ஒன்று வந்து நிற்க. அதைப் பார்த்ததும் இவ்வளவு நேரம் இருந்த மன வேதனை சற்று குறைந்ததுப் போல் இருக்க ஏறி முன் பக்கம் அமர்ந்தவள்.

"விஜய்"

----------

"ப்ளீஸ் பேசுங்க"

"கொலைப் பண்ற அளவுக்கு வெறியில இருக்கேன், மூடிட்டு வந்துடு இல்லனா சாகடிச்சிடுவேன்" என ஆங்காரமாக அவன் குரல் வர.கப்பென்று வாயை மூடிக் கொண்டாள் நிலா.

உடலும் மனமும் மிகவும் சோர்வாக இருந்தது.எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்சனை. இவனுக்குப் பார்க்கப் போய் அவன் அவனுக்குப் பார்க்கப் போய் இவன், என நிலா ஒரு வழியாகிக் கொண்டிருந்தாள்.

இதற்கு வளராமல் சிறு வயதிலையே இருந்திருக்கலாம் என்ன லட்சம் முறை நினைத்துவிட்டாள்.

ஆயிரம் குறைகள் இருந்தாலும் சிறுவயது வாழ்வு இனிக்க தானே செய்தது. இப்போது அந்தக் குறைகளில் 99 சதவிகிதம் இல்லை என்றாலும் மனம் நிம்மதி இல்லாமல் அதைத் தேடி தானே அலைகிறது.

யுகியைப் பார்த்து பேசவேண்டும் போல் இருக்க, அவனிடம் மனசு விட்டு பேசிவிட்டாலே போதும். மனம் அடங்கிவிடும்.பல கேள்விகளுக்கு விடையும் கிடைத்து விடும்.

"விஜய் நம்ப வீட்டுக்குப் போறோமா?"

-----------

%விஜய் ப்ளீஸ் அங்கப் போலாமே அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு". என அவள் வழி நெடுக கெஞ்சிக் கொண்டே வர.கார் சங்கரின் வீட்டின் முன் நின்றது

வயதானவர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு பேரனைப் பார்க்கவும், ஓடி வந்து அணைத்துக் கொண்டனர்.

"ராசா..."

"அம்மாயி எப்படி இருக்கீங்க?" .

"எங்களுக்கு என்ன ராசா?, பையன் அமைச்சரு பேரன் போலீஸ், மருமகன் தொழிலதிபரு எல்லாம் எங்களைய வசதியா வெச்சிக்கிறாங்க." என்றவரின் குரலே வசதி இருக்கிறது, சந்தோசம் இல்லை. என்ன சொல்ல.

"மாமா எங்கையோ வேலை விசயமா வெளியேப் போறேன்னு சொன்னாரு . இவ்வளவு நாள் உங்களைப் பார்த்துக்க ஆள் போட்டுருந்துச்சி, இனி அவங்களை வர வேண்டாம்னு சொல்லியாச்சி உங்கப் பேத்திப் பார்த்துப்பா இனி."

"அம்மினி டவுன்ல படிச்சி வளர்ந்த புள்ள, இங்க அதுக்கு ஒத்து வருமா?".

"எல்லா வரும், வரும்" என்றவன் "என்ன சாப்பட செஞ்சி வெச்சிருக்கீங்க.?"

"தட்டப்பருப்பு சோறு. சாப்புடு ராசா"

"ம்ம்" என்றவன் உள்ளேச் சென்றான்.

"விஜய். அம்மாவைப் பார்க்கணும்னு சொன்னேன்ல ஏதாவது கண்டுக்கறீங்களா?"

"ஊரே என்னோட வார்த்தைக்கு பயந்து நடுங்குது, மினிஸ்டர்ல இருந்து கமிஷ்னர் வரைக்கும் நான் சொல்றதை சொடுக்குப் போடறதுக்கு முன்னாடி செய்யறாங்க. ஆனா நீ என் வார்த்தையை மதிக்கறதே இல்ல.
நான் அவ்வளவு சொல்லியும் கேக்காம அவளை வெளியே எடுத்தது மட்டும் இல்லாம. அவன் சந்தோசமா இருக்க என்னோட வாழ்றதுக் கூட முக்கியம் இல்லைன்னு சொல்ற".என்றவனின் குரலில் அத்தனை ஆதங்கம்.

எமனிடம் போராடி தானே அவளை மீட்டுக்கொண்டு வந்திருக்கிறான்.

"என்ன விஜய் பெரிய பெரிய வார்த்தையில்லாம் பேசறீங்க.நான் எப்போ உங்களை மதிக்காம இருந்துருக்கேன்". 

"நான் அவளை ஜாமீன்ல எடுக்க வேண்டாம்னு சொல்லியும், எடுத்தா வேற என்ன அர்த்தம்?" 

"நீங்களா தானே விடச் சொன்னிங்க". 

"நீங்க தானே மேடம் விட வெச்சீங்க. உங்களுக்கு நாங்களா முக்கியமில்ல,அவன் சந்தோசம் தான் முக்கியம்,அவன் நிம்மதி தான் முக்கியம்,அவன் தான் முக்கியம்னா அப்போ நான் எதுக்கு?. உயிரல இருந்து உடம்பு வரைக்கும் ஒவ்வொரு அணுவுலையும் உனக்கு இடம் கொடுத்துருக்க நான் என்ன கேனையா?" என நந்தன் கோவமாக கேக்க நிலா விழிப் பிதுங்கி நின்றாள். 

அவளே பலக் குழப்பத்துடன் இருக்கிறாள். யுகியிடம் பேசி தீர்வு கண்டால் மட்டுமே அவள் குழப்பம் தீரும் என்ற நிலை. குழம்பி இருப்பவளிடம் போய் கேள்வி கேட்டால் என்ன கிடைக்கும்?. 

"உன்னைய தான் கேக்கறேன்". 

"விஜய் ப்ளீஸ் இங்க இப்போ யார் முக்கியமங்கறது விசயமில்ல. நீங்களும் நானும் உயிரும் உடலும் பின்னி பிணைஞ்சிருக்கோம், நமக்குள்ளையே இவ்வளவு கருத்துவேறுபாடு இருக்கும் போது, ​​அவங்க ரெண்டுபேரும் இன்னும் மனசு விட்டே பேச மாட்டாங்க, அப்போ அவங்களுக்குள்ள இன்னும் எவ்வளவு கருத்துவேறுபாடு இருக்கும் அதை சரிப்பண்ண தான் நான் முயற்சி பண்றேன். அவங்க 

சரிப் பண்றேன். . அவங்கதான் ரெண்டுப் பேரும் ரெண்டு மூலைக்கு இருக்காங்களே எப்படி சரி பண்ணுவாங்க யாராவது ஒருத்தர் உள்ளே இறங்கி சரிப் பண்ணனும்,அப்போதான் எல்லாமே சரியாகும்.எனக்கும் நம்ப சந்தோசம் நம்ப நிம்மதின்னு மட்டும் சுயநலமா யோசிக்க முடியல". என்றவள் நந்தனை அணைத்துக் கொண்டாள். 

இப்போது அவள் இருக்கும் நிலைக்கு அந்த அணைப்பு தேவையாக இருந்தது அதைப் புரிந்து கொண்ட நந்தன். அவள் தோளை சுற்றி கையை அணைத்து ஆறுதல்படுத்தினான். 

நந்தன் செயல் மட்டுமே நிலாவிற்கு ஆறுதல் கூறியது. 

"வீட்டுக்குப் போலாமா?" என்றாள் மெதுவாக 

"இனி அங்க இருக்கப் போறதில்ல". 

"ஏன்.?" 

"இங்க தான் இருக்கப் போறோம்.. வேணுனா ஒரு எட்டுப் போய் பார்த்துட்டு வரலாம் அவ்வளவு தான்". 

"சரி போலாம்". என அவன் என்ன சொன்னாலும் சரி என மண்டையை ஆட்ட. 

நந்தனுக்கு சிரிப்பு வருவதற்கு பதில் விரக்தி புன்னகை தான் வந்தது. 

அவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. நந்தன் என்ன தான் தங்கமென தாங்கினாலும் யுகி, வளவன் இடத்தை நிலா யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டாள். யாருக்காகவும் அவர்களையும் விட்டுக் கொடுக்க மாட்டாள். 

இவ்வளவு புரிந்த நந்தனுக்கு அவளில் பாதியாக தான் மாறி நிற்கிறோம் என புரியாமல் போனதுவோ. 

காவல்நிலையத்தில் இருந்து கவியை அழைத்துக்கொண்டு நேராக மார்த்தியின் வீட்டிற்கு தான் சென்றார்கள். 

கார் உள்ளே வந்ததும் கேட் கதவை இழுத்து மூட.. 

சத்தம் கேட்டு வெளியே வந்த யுகி கவி வருவதைப் பார்த்ததும் அவ்வளவு நேரம் அடங்கி இருந்த கோவம் அனைத்தும் மீண்டும் வீறுகொண்டு எழுந்தது. 

"நில்லு. உன்னைய யார் இங்க வரச் சொன்னது? வெளியேப் போ". 

"யுகி கொஞ்சம் பொறுமையா இரு ப்ளீஸ்". என மார்த்தி அமைதிப் படுத்த முயல.

"பொறுமையா இருக்க என்ன இருக்கு? எப்போ கொலைப்பண்ண அளவுக்கு போனாளோ அப்போவே இவளுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, வெளியே போ" எனக் கத்தினான்.

"எதுக்கு கத்தற?. அவளை நிலா தான் ஜாமீன்ல எடுத்தா". 

"அவ எடுத்தா அவ எங்க இருக்காளோ அங்கப் போகச் சொல்லுங்க, இங்க எதுக்கு வரணும்? இவ இங்க இருந்தா நான் வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் எப்படி வசதி.?" என்று அனைவருக்கும் முன வெளிப்படையாகவே மிரட்டினான். 

"யுகி உள்ளே வரட்டும் பொறவு பேசிக்கலாம்டா". என வளவன் எடுத்துக் கூற. 

"நீயும் அவங்கக் கூட சேர்ந்து பேசாத, அவளே உள்ளையே வரக்கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கேன், நீ உள்ள வந்து பேசிக்கலாம்ன்னு சொல்ற." . என சத்தம் போடும் போதே, நந்தன் நிலா கார் உள்ளே வந்துவிட்டது. 

எல்லோரும் வாசலிலையே நிற்பதைப் பார்த்துக்கொண்டே இறங்கிய நிலா. 

"என்னாச்சி ஏன் வெளியே நிற்கறீங்க?"என்றாள். 

"இவளை யாரைக் கேட்டு ஜாமீன் எடுத்த?". 

"யாரை கேக்கணும்?". 

"என்னைய கேக்கணும். நீ பாட்டுக்கு ஜாமீன்ல எடுத்துட்டு வந்து குடும்பம் நடந்துனா என்னால முடியாது?". 

"யுகி." 

"தயவு செஞ்சி நீ வாயை மூடு ஆத்தா. என் கல்யாண வாழ்க்கையில நீ தலையிடாத , உன் கல்யாணம் வாழ்க்கையில நான் தலையிட்டனா இல்லைல" என்றவன் திரும்பி செல்வராணியிடம் கையெடுத்து கும்பிட்டவன் , "உங்கப் பொண்ணைக் கூட்டிட்டுப் போங்க இனி அவக் கூட குடும்பம் நடத்துற எண்ணமே இல்ல", என நாய் தொரத்தக் குறையாக தொரத்தி அனுப்பி வைத்துவிட்டான். 

கவி முகத்தில் எதுவும் காட்டாமல் அமைதியாக இருந்தாலும் யுகி வேண்டாம் என்றதும் உள்ளுக்குள் நொறுங்கிப் போய்விட்டாள். 

யுகியை அவளுக்கு மிகவும் பிடிக்கும், காதலிக்கிறாள். அதான் அவன் கேட்டதும் யோசிக்காமல் சரி என்றுவிட்டாள். இடையில் நடந்த பேச்சுவார்த்தை. சரஸ்வதி மனதைக் குழப்பியது, அனைத்தும் சேர்ந்து தான் அவளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றது. 

இப்போது மட்டும் நிலாவைப் பிடிக்குமா? இப்போதும் நிலாவை பிடிக்காது. ஆனால் அவளைப் பார்த்து யுகியை இழந்து விடுவோமோ என பயம் வந்துவிட்டது. 

இந்த அறிவு, நிலாவிற்கு விஷம் வைக்கும் போதே கண்டிப்பாக தன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொண்டிருப்பாள். 

யுகியின் வெறுப்பை சம்பாதித்து அவனுடன் சந்தோசமாக வாழ முடியுமா.? 

"அம்மா என்னய கூட்டிட்டுப் போய்டு" என்றாள். 

செல்வராணி எவ்வளவோ பேசிப் பார்த்தார் யுகி கொஞ்சம் கூட இறங்கி வரவில்லை. 

அவனைப் பற்றி சிறிது யோசித்திருந்தாலும் கவி இப்படி ஒரு செயலைச் செய்திருப்பாளா?. நிலாவுடன் அவனுடைய உறவு நேற்று வந்ததா?.இல்லை யாரிடமாவது மறைத்து அவர்கள் இருவரும் உறவை வளர்க்கிறார்களா?. நிலா பிறந்ததில் இருந்தே யுகி இப்படி தான் இருக்கிறான், உடனே மாறு அவளிடம் பேசாதே, அவளைப் பார்க்காதே, எப்படி? அவனுக்கான நேரத்தைக் கொடுக்க வேண்டும் அல்லவா.? 

மருந்து குடித்த அந்த நிலாவைப் பார்த்த யுகிக்கு உடலில் உயிரே இல்லை. ஒவ்வொரு நொடியும் மரணத்தை தழுவுவது எப்படி என்பதை அன்று தான் உணர்ந்தான். 

அவளைக் காதலித்தான் காதலை விட தன்னை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறாள் என்றதும் காதல் எல்லாம் பெரிதே இல்லை நீயே வைத்துக்கொள் என நந்தனிடம் கொடுத்துவிட்டான், இப்போது அவன் மனதில் நிலா என்றால் அவன் உயிர் அவ்வளவு தான். என் உயிருக்கு நீ சொந்தக்காரியாக இரு,என் உணர்வுகளுக்கு வேறொருத்தி தான் சொந்தக்காரி என மனதில் ஆழப் பதிய வைத்துக்கொண்டான்.அதை கவியிடம் தெளிவாக சொல்லியும் விட்டான்.

அப்படி இருந்தும் கவி இப்படி செய்தால், அவன் மீது அவள் என்ன மதிப்பு வைத்திருக்கிறாள். நிலாவை இந்த நிலைக்கு ஆளாக்கிய கவியை முகத்தைப் பார்க்க வேண்டும் என்றுக் கூடத் தோன்ற மாட்டேன் என்கிறது யுகிக்கு .இதில் எங்கு மன்னிப்பது?.

கவியுடன் அவள் குடும்பம் கிளம்பிவிட.இப்போது நந்தன் குடும்பமும் நிலாவின் குடும்பமும் மட்டும் தான் இருந்தனர்

"உனக்கிட்ட கொஞ்சம் பேசணும் வா" என்றாள் நிலா யுகியின் கையைப் பற்றி.

அவள் கையை விலக்கி விட்டவன். "இப்போதைக்கு நீ என்ன பேசுனாலும் மனசு மாறுற நிலைமையில நான் இல்ல.விடு" என நகரப் போனவனை 

"சரி பரவால்ல வா". என அவனை இழுத்துக்கொண்டுப் போய் காரில் ஏற்றினாள்.

வரும் போது நல்ல முடிவுடன் வருவாள் என அனைவருக்கும் தெரியும்.

நந்தன் உள்ளேச் சென்றவன் மணியை இழுத்து சோபாவில் அமர செய்தான்.

"என்ன தம்பி?"

"இப்படியே உக்காருங்க" என்றவன், அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டான்.

யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. நந்தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருக்க அடக்கிப் பழகியவன். சில நேரம் நிலா அவனை எடுத்து எறிந்து பேசும்போது அவனையும் மீறி உணர்வுகள் வெளிவரத் துடிக்கிறது யாராவது 'உனக்கு என்னடா பிரச்சனை சொல்லு' என அவன் தலையைக் கோதிக் கேக்க மாட்டார்களா?தன் மனதில் இருப்பதைக் கொட்ட, என மனம் ஏங்கச் செய்கிறது.

வளவனிற்கு புரிந்தது எந்த அளவிற்கு நந்தன் மனதால் காயப்பட்டிருக்கிறான் என்று.

மணி மகனின் தலையை வருடிக் கொடுத்தார். அவர் கண்கள் கலங்கி இருக்க அதை யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டார்.


Leave a comment


Comments


Related Post