Total Views: 25693
கர்வம் வீழ்ந்ததடி உன் விழியசைவில்
குட்டி டீசர்.
“ஸ்ரீ, நீயும் மாப்பிள்ளை கழுத்துல மாலையப் போடும்மா.” என ஒரு குரல் காதை அடைத்தது.
‘ஏன்டா, என்னையப் பாடாப் படுத்தறீங்க, எனக்குப் புடிச்சிருக்கா? புடிக்கலையா? எதுமே கேக்காம நீங்களே முடிவு பண்ணிட்டு பேசுனா நானும் தான் என்ன பண்ணுவேன்?’ என்று உள்ளூரப் புலம்பிக் கொண்டவள், வெளியே பல்லைக் கடித்துக் கொண்டே, மாலையை அதீரனின் கழுத்தில் போட்டு அவனுக்கு மட்டும் கேக்கும் குரலில், “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றாள்.
“நோ நீட்” என்று சாதாரணமாக சொன்னவனின் முகத்திலேயே நாலு குத்து குத்த வேண்டும் போல் இருந்தது.
‘உனக்குத் தேவையில்லடா, எனக்குத் தேவை. வந்து பேசித் தொலை’ என மனம் கூவ. அவளது கூவல் அதீரனுக்கு சென்றடைந்ததா என்று தெரியவில்லை.
“இந்தாம்மா ஸ்ரீ, மோதிரம் போட்டு விடு.” என கமலா ஸ்ரீயின் கையில் மோதிரத்தைக் கொடுக்க, அதை வாங்கியவளின் கண்களில் அவ்வளவு வலி.
விழிகளின் பாஷை புரியுமா? என்றால், ஸ்ரீநிதியின் விழிகள் பேசும் பாஷை அதீரனுக்குப் புரியும்.
ஸ்ரீநிதியின் நயனங்கள் ஆடும் நர்த்தனத்தைப் பார்த்துக் கொண்டே அதீரன் விரலை நீட்ட, வேறு வழியின்றி அவனை நிமிர்ந்து பார்க்காமலே மோதிரத்தைப் போட்டு விட்டாள்.
நிமிர்ந்து பார்த்து விட்டால் அவனின் வெற்றிப் புன்னகை ஆளைக் கொன்று விடுமோ என்ற பயத்தில் குனிந்த வண்ணமாகவே இருந்து விட,
“சின்ன அம்மிணி தலை தூக்கி மாப்பிள்ளையைப் பாருங்க. உங்களுக்கு ஏத்த ராச குமாரன் சும்மா ஜம்முனு இருக்காங்க.” என அவளுக்கு மட்டும் கேக்கும் குரலில் ராசு சொல்ல, பிடிவாதமாகப் பார்க்க மறுத்து விட்டாள். அனைவரும் அதை வெட்கம் என்று கடந்தும் விட்டனர்.
எப்படி எப்படியோ சொல்லிப் பார்த்து ஸ்ரீயைத் தலை நிமிர வைக்க முயன்றனர். ஆனால், ‘நான் தலை நிமிர்ந்தாப் பாருங்கடா’ என்பது போலவே ஸ்ரீ நின்றிருக்க, அதீரன் அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்றிருந்தான்.
அவனுமே இந்த இடத்தில் ஸ்ரீயை எதிர்பார்க்கவில்லை, இப்போதும் கூட இது கனவாக இருக்குமோ என்ற சந்தேகம் அவ்வப்போது தோன்றியது.
வருங்காலக் கணவனை நினைத்து எத்தனை எத்தனை கனவுகள், அவை யாவும் கனவாகவே போய்விடும் என்று ஸ்ரீநிதி ஒருநாளும் நினைத்ததில்லை. இன்று அதீரனை மாப்பிள்ளையாகப் பார்த்ததும், ‘அனைத்தும் கனவாகத் தான் போய் விடும்.’ என மனம் சொல்லாமல் சொல்லியது.